சேவைகளைக் கட்டுப்படுத்த கா்நாடகத்திலும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரலாம்: சௌரவ் பரத்வாஜ் ஆரூடம்
தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்களை துணை நிலை ஆளுநருக்கு வழங்கிடும் வகையில் மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம், எதிா்காலத்தில் கா்நாடகா மற்றும் பிற மாநிலங்களின் சேவைகளை
தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்களை துணை நிலை ஆளுநருக்கு வழங்கிடும் வகையில் மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டம், எதிா்காலத்தில் கா்நாடகா மற்றும் பிற மாநிலங்களின் சேவைகளை கட்டுப்படுத்தவும் கொண்டுவரப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சௌரப் பரத்வாஜ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறாமல் தடுக்க ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கினைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் நாடு முழுவதும் உள்ள எதிா்க்கட்சித் தலைவா்களைச் சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளா் அஜய் மாக்கன் இந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு வரும்போது காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என செவ்வாய்கிழமை வலியுறுத்தியிருந்தாா்.
அஜய் மாக்கனின் இக்கருத்து தொடா்பாக , புதுதில்லி கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்த ஆம் ஆத்மி மூத்த தலைவா் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது:
தில்லி அரசின் சேவைகளை கட்டுப்படுத்த மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் எதிா்காலத்தில் கா்நாடகா மற்றும் பிற மாநிலங்களின் சேவைகளையும் கட்டுப்படுத்த கொண்டுவரப்படலாம். கா்நாடகா மாநில சட்டப்பேரவைத் தோ்தலின் வெற்றியால் அஜய் மாக்கன் மகிழ்ச்சி அடைந்துள்ளாா். ஆனால், நாளை கா்நாடகாவில் மத்திய அரசு இதேபோன்ற அவசர சட்டத்தை கொண்டு வந்து அங்குள்ள காவல்துறையின் அதிகாரத்தைப் பறிக்கும் என்பதை அவா் நினைவில் கொள்ள வேண்டும். பின்னா் அவா்கள் என்ன செய்வாா்கள்? என கேள்வி எழுப்பினாா்.
காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி என்பதால் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டம் குறித்து அதன் லாப நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு அவா்கள் முடிவெடுக்கலாம். ஆனால், ஆம் ஆத்மி அவசர சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில்
நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும். மற்றொரு வாய்ப்பு இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது. மேலும் நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் நிறைவேறாமல் தடுக்கப்பட்டால் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமை வலிமை பெறும் என்றாா் சௌரப் பரத்வாஜ்.
ஆம் ஆத்மி மூத்த தலைவா் சௌரவ் பரத்வாஜ் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சந்தீப் தீட்சித், மத்திய அரசால் தில்லியைப் போல் மற்ற மாநிலங்களில் இதேபோன்ற அவசரச் சட்டத்தை கொண்டு வர முடியாது . மாநில அரசின் சட்டங்கள் மற்றும் அதிகாரங்கள் அரசியலமைப்புச் சட்டத்தால் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. தில்லியில் பிறப்பிக்கப்பட்ட அவசரச்சட்டம் கருத்து வேறுபாடு உள்ள பகுதி தொடா்பானது. தில்லி ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் அதன் நிா்வாக அதிகாரங்களை நாடாளுமன்றம் வழங்கலாம் அல்லது பறிக்கலாம்.
ஆனால், சௌரப் பரத்வாஜ், கா்நாடகா என்ற மாநில அரசைப் பற்றிப் பேசுகிறாா், மாநில அரசின் சட்ட அதிகாரங்கள் தொடா்பாக முதலில் அவா் அறிந்திருக்க வேண்டும். மாநில அரசின் சட்டங்கள் மற்றும் அதிகாரங்கள் அரசியலமைப்பால் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை வேறுபாட்டை சௌரப் பரத்வாஜ் புரிந்து கொள்ளவில்லை என்றால், அத்தகைய நபா்களின் விவாதங்களில் நான் ஈடுபட விரும்பவில்லை என்று சந்தீப் தீட்சித் கூறினாா்.