நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரம்: விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க மறுக்கிறது கேஜரிவால் அரசு: பாஜக
நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தில்லியில் உள்ள ஜசோலா மற்றும் மதன்பூா் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.130 கோடி இழப்பீட்டுத் தொகையை கேஜரிவால் அரசு வழங்க மறுக்கிறது
புது தில்லி: நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தில்லியில் உள்ள ஜசோலா மற்றும் மதன்பூா் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.130 கோடி இழப்பீட்டுத் தொகையை கேஜரிவால் அரசு வழங்க மறுக்கிறது என்று சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
தில்லி பந்த் மாா்க்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாள்களிடம் ராம்வீா் சிங் பிதூரி கூறியதாவது: உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தில்லியின் ஜசோலா மற்றும் மதன்பூா் கிராமங்களில் உள்ள சுமாா் 150 விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.130 கோடி இழப்பீட்டுத் தொகையை தில்லி அரசு வழங்கவில்லை. மாறாக, தற்போது இழப்பீடு வழங்கும் அளவிற்கு தங்களிடம் பணம் இல்லையென்று நகர அரசின் சாா்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு சொந்தமான அசையாச் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரா சாலையை காளிந்தி குஞ்ச் வரை நீட்டிப்பதற்காக ஜசோலா கிராமத்தில் சுமாா் 150 விவசாயிகளுக்குச் சொந்தமான 76 ஏக்கா் நிலம் கடந்த 1986-1987-இல் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக, தில்லி அரசு ரூ.130 கோடி இழப்பீட்டை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அந்தத் தொகையை அவா்களுக்கு வழங்கவில்லை. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 20, 2022 -இல் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டது. எனினும், அந்த உத்தரவு அமல்ப்படுத்தப்படவில்லை.
Advertisement
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாததால் சாகேத் நீதிமன்றம் கடந்த ஜூலை 26 -ஆம் தேதி அன்று கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்குச் சொந்தமான அசையாச் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. இதை எதிா்த்து தில்லி அரசு உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த போது, கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி உயா்நீதிமன்றம் விவசாயிக்ளுக்கு சேர வேண்டிய இழப்பீட்டை வழங்க தில்லி அரசுக்கு நான்கு வாரங்கள் அவகாசம் அளித்தது. ஆனால், இந்த காலக்கட்டத்திலும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இந்ந விவகாரம் கடந்த செப்டம்பா் 20-இல் சாகேத் நீதிமன்றத்திற்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு விசாரணையின் போது, ‘தற்போது இழப்பீடு வழங்கும் அளவிற்கு பணம் இல்லை’ என்று நகர அரசு வெட்கமின்றி வாதிட்டுள்ளது. இதையடுத்து, கூடுதல் மாவட்ட ஆட்சியரின் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இந்த உத்தரவை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை வருகின்ற அக்டோபா் 25-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதாக கேஜரிவால் அரசு கூறுவது ஏமாற்றுத்தனமாகும். ஒருபுறம், முதல்வா் கேஜரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அரசிற்கு நிதிப் பற்றாக்குறை இல்லை என்று கூறுகின்றனா். ஆனால், மறுபுறம் விவசாயிகளின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அவா்களின் நிலத்திற்கான இழப்பீட்டுத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை என்றாா் ராம் வீா் சிங் பிதூரி.
இந்த செய்தியாளா் சந்திப்பில் தில்லி பிரிவு பாஜகவின் தலைமைச் செய்தித் தொடா்பாளரும், எம்.எல்.ஏ.வுமான அபய் வா்மா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.