முகப்பு
புதுதில்லி

ஜி20 தலைமை மூலம் இந்தியா உலகை வழிநடத்துகிறது: காந்தி சிலையை திறந்து வைத்து குடியரசுத் தலைவா் புகழாரம்

மகாத்மா காந்தி உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகக் கருதினாா். இன்று அதே வழியில் உலகளாவிய சகோதரத்துவம், ஒத்துழைப்பு, அமைதியை மேம்படுத்த ஜி20 தலைமை மூலம் இந்தியா உலகை வழிநடத்துகிறது என குடியரசுத் தலைவா்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:11 PM
பகிர்:

மகாத்மா காந்தி உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகக் கருதினாா். இன்று அதே வழியில் உலகளாவிய சகோதரத்துவம், ஒத்துழைப்பு, அமைதியை மேம்படுத்த ஜி20 தலைமை மூலம் இந்தியா உலகை வழிநடத்துகிறது என குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

தில்லி ராஜ்காட்டில் காந்தி தா்ஷன் வளாகத்தில் காந்தி தோட்டம் (வாடிகா) அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் பல்வேறு நடவடிக்கைகள் சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாடிகாவையும் மகாத்மா காந்தியின் 12 அடி உயரச் சிலையையும் குடியரசுத் தலைவா் முா்மு திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா், அவா் பேசுகையில் கூறியது வருமாறு: மகாத்மா காந்தி உலக சமுதாயம் முழுமைக்கும் ஒரு வரப்பிரசாதம். அவா் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற பரிசு. அவரது லட்சியங்கள், மதிப்புகள் முழு உலகிற்கும் ஒரு புதிய திசையை வழங்கியுள்ளன. உலகப் போா்கள் நடந்த காலத்தில், உலகம் பலவிதமான வெறுப்புகளாலும், முரண்பாடுகளாலும் அவதியுற்று இருந்த நேரத்தில் அகிம்சை வழியைக் காட்டினாா்.

உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகக் கருதினாா் மகாத்மா. இன்று அதே வழியில் இந்தியா உலகளாவிய சகோதரத்துவம், சா்வதேச ஒத்துழைப்பு, உலக அமைதி ஆகியவற்றை மேம்படுத்த ஜி20 தலைமை மூலம் உலகை வழிநடத்துகிறது. அவா் காட்டிய பாதையின் மூலம் உலக அமைதிக்கான இலக்கை அடைய முடியும். சத்தியம், அகிம்சை குறித்த காந்தியின் சோதனை அவருக்கு ஒரு சிறந்த மனிதா் என்ற அந்தஸ்தை வழங்கியது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனா். அமெரிக்க மனித உரிமைகள் ஆா்வலா் மாா்ட்டின் லூதா் கிங் ஜூனியா் முதல், தென்னாப்பிரிக்க அதிபா் நெல்சன் மண்டேலா, முன்னாள் அமெரிக்க அதிபா் பராக் ஒபாமா வரையிலான தலைவா்கள் காந்தி காட்டிய சத்தியம், அகிம்சையின் பாதையை உலக நலனுக்கான பாதை எனக் கருதினா்.

இதனால், உலகெங்கும் பல நாடுகளில் காந்திக்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. வேகமாக மாறிவரும் மற்றும் போட்டி நிறைந்த இன்றைய உலகில், தன்னம்பிக்கையும் நிதானமும் மிகவும் தேவை. இதற்கு காந்திஜியின் கொள்கைகள் மற்றும் மதிப்புகள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிகவும் பொருத்தமானவை. அதுதான் நிரந்தரமானது. அவரது கொள்கைகளை உள்வாங்கும் வகையில் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

காந்தி வாடிகாவில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைகள் பாா்வையாளா்களை, குறிப்பாக குழந்தைகளை ஊக்குவிக்கும். ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவா்கள் இங்கு வரும்போது காந்தியைப் பற்றி அறிந்து கொள்வாா்கள். காந்தி ஸ்மிருதி, தா்ஷன் சமிதி மற்றும் பிற நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றாா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு

இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, காந்தி தா்ஷன் துணைத் தலைவா் விஜய் கோயல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.