ஈரான் பள்ளி மீதான தாக்குதல் விவகாரம்! மார்ச் 27-ல் ஐ.நா. அவசர விவாதம்!
ஈரானிய பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அவசர விவாதம்...
ஈரானில், பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதலில் 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை கவுன்சிலில் வரும் மார்ச் 27 அன்று அவசர விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் நடைபெற்ற போரால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை மூலம் கடந்த பிப். 28 அன்று ஈரானின் மினாப் நகரத்திலுள்ள பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில், ஏராளமான குழந்தைகள் உள்பட 165-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலானது போர்க் குற்றம் எனக் கூறி சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், ஒரே வாரத்தில் வளைகுடா போர் பற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெறும் 2 ஆவது விவாதத்தில், ஈரான், சீனா மற்றும் கியூபா ஆகிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தலைவர் சிதார்த்தோ ரெசா சூர்யோதிபுரோ கூறுகையில், சர்வதேச ஆயுத மோதல்களில் குழந்தைகள் மற்றும் கல்வி நிலையங்களின் பாதுகாப்பு எனும் தலைப்பில் அவசர விவாதம் வரும் மார்ச் 27 அன்று நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.