முகப்பு
புதுதில்லி

அணைகளின் நீர் அடிப்படையில் இடர்ப்பாட்டை கணக்கிடக் கூடாது : உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு 

கர்நாடகத்தில் உள்ள நான்கு நீர்த் தேக்கங்களின் பற்றாக்குறையை மட்டுமே கருத்தில் கொண்டு நீர் இடர்ப்பாட்டை கணக்கிட கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:12 PM
பகிர்:

கர்நாடகத்தில் உள்ள நான்கு நீர்த் தேக்கங்களின் பற்றாக்குறையை மட்டுமே கருத்தில் கொண்டு நீர் இடர்ப்பாட்டை கணக்கிட கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகம் தரப்பில் 31-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், கர்நாடக அரசு இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ஆகஸ்ட் 11 வரையிலான 8.988 டிஎம்சி நிலுவை நீர் அல்லது ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரையிலும் 9.341 டிஎம்சி நிலுவை நீர் இருப்பதாகக் கூறுவது திசைதிருப்புவதாக உள்ளது. 

நீர் இடர்ப்பாடு சூழலை பருவமழை செயல்பாடு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள நீர்வரத்து ஆகியவற்றைப் பார்த்தே கணக்கிட முடியும். கர்நாடகத்தில் உள்ள நான்கு நீர்த் தேக்கங்களின் பற்றாக்குறையை மட்டுமே கருத்தில் கொண்டு நீர் இடர்ப்பாட்டை கணக்கிட கூடாது.

மேலும், சிடபிள்யுஎம்ஏவின் 23-ஆவது கூட்டத்தில் ஜல் சக்தி அமைச்சகப் பிரதிநிதி, மேட்டூர் அணையில் உள்ள  நீரை நியாயமற்ற வகையில் வீணாகவும் தமிழகம் பயன்படுத்தியதாக ஆணையத்திடம் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி தமிழகம் 69.777 டிஎம்சி நீரையும், கர்நாடகத்தில் இருந்து ஆகஸ்ட் 29-ஆம்தேதி வரை வந்த நீர்வரத்து 31,040 டிஎம்சி நீரையும் பயன்படுத்தியிருந்தால், தற்போதைய கடினமான சூழல் ஏற்பட்டிருக்காது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செப்.21-இல் விசாரணை: இதனிடையே, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரைத் திறந்துவிடக் கோரும் விவகாரத்தில், முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பான விவகாரம் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீர்ப் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்.1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

உச்சநீதிமன்றத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் தாக்கலான மனுவில், "ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 23-ஆவது கூட்டத்தின்போது, அடுத்த 15 நாள்களுக்கு (29.8.2023 முதல் 12.9.2023 வரை) கர்நாடகம்  பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கர்நாடக அரசு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு மறுப்புத் தெரிவித்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) தாக்கல் செய்த மனுவில், "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி தமிழகத்துக்குரிய பங்கீட்டு நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டிய நிலையில், அதைச் செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் தவறிவிட்டது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை இருந்த 8.988 டிஎம்சி பற்றாக்குறை நீரை சரிசெய்யும் வகையில், ஆணையம் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. இது தவிர, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை உரிய நீரை திறந்துவிடவும் ஆணையம் உரிய உத்தரவைப் பிறப்பிக்கத் தவறிவிட்டது. காவிரி நீரை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என்ற கர்நாடக அரசின் குற்றச்சாட்டில் உண்மையில்லை' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிடப்படாததால் தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் செப்டம்பர் 6-ஆம் தேதி விசாரிக்கப்படும் எனக் கூறி இருந்தனர்.  

இந்த நிலையில், செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் இந்த விவகாரம் இடம்பெற்றிருந்தது. ஆனால், அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா விடுப்பில் இருந்ததால், புதன்கிழமை காவிரி விவகாரம் தொடர்புடைய அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன் இந்த விவகாரத்தை தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி, ஜி.உமாபதி ஆகியோர் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.  

அதற்கு நீதிபதி பி.ஆர்.கவாய், "அடுத்த வாரம் தான் வழக்கு விசாரணைக்கு இருக்க மாட்டேன் என்பதால், மிகவும் அவசரம் என்றால் வேறு அமர்வு விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதியிடம் முறையிடலாம்' எனக் கூறினார். அதற்கு மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, "உங்கள் அமர்வே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, செப்டம்பர் 21-ஆம் தேதி இந்த விவகாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார். முன்னதாக, கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மோகன் கட்டார்க்கி, தமிழகத்துக்கு நீரைத் திறந்துவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.