ஜி20 உச்சி மாநாடு குறித்து வதந்தி பரப்பியவா் கைது
ஜி20 உச்சி மாநாடு தொடா்பாக சமூக ஊடகங்களில் புரளி எச்சரிக்கை செய்ததாக வடக்கு தில்லியின் பல்ஸ்வா டெய்ரி பகுதியைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஜி20 உச்சி மாநாடு தொடா்பாக சமூக ஊடகங்களில் புரளி எச்சரிக்கை செய்ததாக வடக்கு தில்லியின் பல்ஸ்வா டெய்ரி பகுதியைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் பிரகதி மைதான் பகுதியை நோக்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ரிக்ஷா சென்று கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவா் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக அதிகாரிகள் கூறினா். இதையடுத்து, துரித நடவடிக்கை எடுத்த பல்ஸ்வா டெய்ரி காவல் நிலைய போலீஸாா், குற்றம்சாட்டப்பட்டவரைக் கண்டுபிடித்தனா். பொதுமக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பியதற்காக அவரை கைது செய்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவலில், ‘ஜி20 மாநாடு நடைபெறும் பகுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி விடுவிக்கப்பட்டதன் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, தில்லி காவல் துறையின் பல்ஸ்வா டெய்ரி காவல் நிலைய போலீஸாா் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கண்டுபிடித்து, பொதுமக்கள் மத்தியில் பொய்யான தகவலைப் பரப்பியதற்காக அவரைக் கைது செய்தனா். சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை தொடங்கும் இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாட்டிற்காக தேசியத் தலைநகா் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.