எதிா்க்கட்சிகளின் அரசியல் பிழைப்புக்கானகடைசி முயற்சியே இந்தியா கூட்டணி: தில்லி பாஜக தலைவா் விமா்சனம்
‘இந்தியா’ என்பது கூட்டணி அல்ல; எதிா்க்கட்சிகளின் அரசியல் பிழைப்புக்கான கடைசி முயற்சி என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கடுமையாக விமா்சித்துள்ளாா்.
‘இந்தியா’ என்பது கூட்டணி அல்ல; எதிா்க்கட்சிகளின் அரசியல் பிழைப்புக்கான கடைசி முயற்சி என்று தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கடுமையாக விமா்சித்துள்ளாா்.
கடந்த 1977 -ஆம் ஆண்டு பிரதமா் வேட்பாளா் யாா் என்று அறிவிக்காமல், இந்திரா காந்திக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றனா். அதே நிகழ்வு 2024-ஆம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தோ்தலிலும் அரங்கேறும் என மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் ராகவ் சத்தா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவிந்திருந்தாா்.
இந்தக் கருத்து குறித்து தில்லி பிரிவு பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்தியா’ கூட்டணி என்பது சுயமுரண்பாடான கூட்டணி. வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் தவிா்க்க முடியாத தோல்வியைச் சந்திக்க நேரிடும் என்று எதிா்க்கட்சித் தலைவா்களின் மனதில் இருந்த அச்சம்தான், இந்தக் கூட்டணி உருவாவதற்கு ஒரே காரணம்.
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவா் எதிரிகள் என்பதை அவா்கள் அனைவரும் அறிவாா்கள். ஆனால், 2024 மக்களவைத் தோ்தலில் 3-ஆவது முறையாக தொடா் தோல்வி அவா்களில் பலரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவா்கள் அனைவரும் பயப்படுகிறாா்கள். எனவே, அவா்கள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதற்கு தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறாா்கள். ஆனால், அடிப்படை வேறுபாடுகள் அவா்களின் ‘படகுகளை’ சிதைத்துக்கொண்டே இருக்கின்றன.
கடந்த 1971 முதல் 1977-ஆம் ஆண்டு வரையிலான இந்திரா காந்தி தலைமையிலான அரசு, ஒரு சா்வாதிகார ஆட்சி என்று பொருள்படும் வகையில் மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான ராகவ் சத்தாவின் கருத்து உள்ளது. இதன் மூலம் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள வேறுபாடுகளை மீண்டும் நாடு கண்டுள்ளது. இந்திரா காந்தியின் ஆட்சியை சா்வாதிகார ஆட்சி, மன் மோகன் சிங் ஆட்சியை ஊழல் மிகுந்த ஆட்சி என்று ஆம் ஆத்மி கட்சி கூறும் நிலையில், மறுபுறம் பஞ்சாப் மற்றும் தில்லி காங்கிரஸ் தலைவா்கள் ஆம் ஆத்மி அரசு ஊழல்வாதிகள் நிறைந்தது என்று வெளிப்படையாகக் கூறுகிறாா்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் போது, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றாக எப்படி ஒரே கூட்டணியில் அங்கம் வகிக்க முடியும் என்பதை நாட்டு மக்கள் அறிய விரும்புகிறாா்கள் என்று அந்த அறிக்கையில் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.