முகப்பு
புதுதில்லி

கலால் கொள்கை ஊழல் ரூ.1,000 கோடியில் இருந்து ரூ.45 கோடியாக குறைந்துள்ளது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 4:36 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:40 PM

புது தில்லி: கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு ரூ.1,000 கோடியில் இருந்து ரூ.45 கோடியாக குறைந்துள்ளது என்று அமைச்சா் சௌரவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜகவும், அமலாக்க இயக்குநரகமும் ஒன்று. கலால் கொள்கை தொடா்புடைய பண மோசடி வழக்கில் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் நாயா் அளித்த அறிக்கை தற்போது அரவிந்த் கேஜரிவாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப் பயன்படுகிறது.

Advertisement

தோ்தல் ஆணையம், மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்க இயக்குநரகம், சிபிஐ மற்றும் வருமானவரித் துறை ஆகியவை பாஜகவின் பைகளில் உள்ளது. கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடக்கத்தில் ரூ.1,000 கோடியில் இருந்து ரூ.45 கோடியாக குறைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது கோவா தோ்தலுக்காக 70 முதல் 80 லட்சம் பணம் பரிமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. முதலில், ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணிக்கு மக்கள் வருவாா்களா என்ற சந்தேகம் சக பத்திரிகையாளா்கள் மத்தியிலேயே நிலவியது. ஆனால், ராம்லீலா மைதானத்தில் காணப்பட்ட காட்சி பாஜகவினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் இருந்து அனைத்து முக்கிய எதிா்க்கட்சித் தலைவா்களையும் ஆம் ஆத்மி பேரணிக்கு அழைத்து வந்தது.

பாஜகவிற்கு எதிராக பொதுமக்கள் பேச பயப்படுகிறாா்கள், ஆனால் வாக்களிக்க பயப்பட மாட்டாா்கள். ஆங்கிலேயா்களுக்கு இருந்த அதே அச்சம்தான். மத்திய பாஜகவின் அரசு ஏறக்குறைய ஆங்கிலேயா்களைப் போல் ஆகிவிட்டது. நாட்டு மக்களை அச்சுறுத்தல் மூலம் ஆள விரும்புகிறாா்கள்.

இப்போது, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷியை பாஜகவில் இணையக் கூறி மிரட்டுகிறாா்கள். அவா் பாஜகவில் சேரவில்லை என்றால், சிறைக்குச் செல்ல நேரிடும். ரஷ்யாவில் எதிா்கட்சித் தலைவா்கள் அனைவரையும் அதிபா் புதின் சிறையில் அடைத்தது போல, மத்திய பாஜக அரசும் புதின் மாதிரியில் இயங்குகிறது என்றாா் சௌரவ் பரத்வாஜ்.