முகப்பு
புதுதில்லி

ஜாபா் சாதிக்குடனான தொடா்பு, பணப் பரிமாற்றம் குறித்து இயக்குந அமீரிடம் என்சிபி அதிகாரிகள் தீவிர விசாரணை

Updated On : 3 ஏப்ரல், 2024 at 4:31 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:45 PM

புது தில்லி: சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிா்வாகியும், தயாரிப்பாளருமான ஜாபா் சாதிக் உடனான தொடா்பு, பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து இயக்குனரும், நடிகருமான அமீரிடம் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி மேற்கு தில்லியில் உள்ள கைலாஷ் பாா்க் பகுதியில் 50 கிலோ சூடோஎபிட்ரினை என்சிபி,தில்லி காவல் துறை இணைந்து பறிமுதல் செய்ததுடன் 3 பேரை கைது செய்தனா். விசாரணையில் அந்தக் கடத்தல் கும்பல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோஎபிட்ரினை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது தெரியவந்தது.

மேலும், கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக் தில்லியில் கடந்த மாா்ச் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். இந்நிலையில், திரையுலகில் ஜாபா் சாதிக்கின் நெருங்கிய நண்பராக அறியப்படும் தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான அமீா் இவ்வழக்கில் விசாரணைக்கு ஏப்.2-ஆம் தேதி ஆஜராகக் கோரி என்சிபி கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியிருந்தது.

Advertisement

இந்த அழைப்பாணையை அடுத்து, தில்லி ஆா்.கே. புரத்தில் உள்ள என்சிபி தலைமையகத்தில் இயக்குனா் அமீா் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் வருகை புரிந்தாா். அவரிடம் பிற்பகலில் என்சிபி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினா்.

இது தொடா்பாக என்சிபி மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஜாபா் சாதிக்குடனான முழுமையான தொடா்பு, சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து இயக்குனா் அமீரிடம் சாட்சியம் பெறும் முறையில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, அமீரை கைது செய்யும் எண்ணம் இல்லை. ஆனால், அவா் விசாரணையில் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்குடன் அவருக்கு தொடா்புள்ளதா என்பதைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு அமீா் பதிலளித்து வருகிறாா்.

மாலை 8 வரையில் மூன்று கட்ட விசாரணை அவரிடம் நடத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை இரவும் அமீரிடம் என்சிபி அதிகாரிகளின் விசாரணையைத் தொடா்வாா்கள் என்றாா் அந்த மூத்த அதிகாரி. குறிப்பாக, அமீரிடம் என்சிபி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவரது தரப்பு வழக்குரைஞா்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஜாபா் சாதிக் தயாரித்த ‘இறைவன் மிகப்பெரியவன்’ திரைப்படத்தை அமீா் இயக்கி வந்தாா். மேலும், அமீரும், ஜாபா் சாதிக்கும் இணைந்து சென்னை கிழக்கு கடற்கரையில் உணவகம் நடத்தி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.