எஸ்ஐஆர்: ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகள் நீக்கம்! மமதா குற்றச்சாட்டு
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக மமதா பானர்ஜி பேச்சு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று (ஏப். 5) குற்றம் சாட்டினார்.
மாநிலத்தின் நிர்வாகப் பணிகளைப் பாதிக்கக்கூடிய வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.
மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
அந்தவகையில் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் பிரசாரத்தின்போது முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது:
''இந்த முறை விவசாயிகளுக்கென தனியாக பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வாக்காளர் சிறப்புப் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளின்போது இந்த ஒரு தொகுதியில் மட்டும் 500 அதிகாரிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் நிர்வாகப் பணிகளை முடக்கும் நோக்கத்தில் இவ்வாறு செய்யப்படுகிறது.
உங்களால் (பாஜக) ஒரு மாதத்திற்கு மட்டுமே இப்பணிகளை நிறுத்திவைக்க முடியும். ஆனால், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அவர்களால் என் மாநில நிர்வாகப் பணிகள் நடக்கும்.
ஒருவரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் மறைமுகமாக மற்றொருவரை நீங்கள் (பாஜக) மிரட்டுகிறீர்கள். அதற்கு என் அரசு ஒருபோதும் அஞ்சாது''எனப் பேசினார்.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. எனினும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தப் பணியில் இதுவரை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் 61 லட்சம் பேருக்கு திருத்தங்கள் நடைபெற்றுள்ளன.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தொடர்ந்து அவர் 4 முறை வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளார். இம்முறை இவருக்கான வெற்றி வாய்ப்பைக் குறைக்கும் வகையில் சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கியுள்ளது.