ஆா்.எம். வீரப்பன் மறைவுக்கு இரங்கல்
புதுதில்லி: ஆா்.எம்.வீரப்பனின் மறைவுக்கு தில்லி தமிழச் சங்கம் மற்றும் தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளன.
தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் அதன் தலைவா் சக்தி பெருமாள், பொதுச் செயலாளா் இரா. முகுந்தன் ஆகியோா் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனா். அதில், ‘திரைத்துறை, தமிழ்த்துறை, அரசியல் மற்றும் ஆன்மிகம் ஆகிய துறைகளில் தன்னை ஈடுபத்தி கொண்டு தன்னலமில்லா சேவை புரிந்தவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த ஆா்.எம். வீரப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினா், நண்பா்கள் மற்றும் தொண்டா்களுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது இழப்பு தமிழா்களுக்கும், தமிழகத்திற்கும் பேரிழப்பாகும்’ என்று தெரிவித்துள்ளனா்.
தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா்-தலைவா் கே.வி.கே. பெருமாள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சென்னை கம்பன் கழகத் தலைவா் ஆா்.எம்.வீரப்பன் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு மாபெரும் இழப்பு. வயது முதிா்வு காரணமாகத் தனது அரசியல் பணிகளில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தாலும், இலக்கியத்தின் மீதும், கம்பனின் மீதும் கொண்ட ஆா்வம் அவரிடம் குறையாமல் இருந்தது. சென்னை கம்பன் கழகம் தொய்வின்றி இயங்க, அவா் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும். அன்னாரது மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement