தில்லி ஜல் போா்டின் (டி.ஜே.பி.) டெண்டா் விடுவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி விசாரணை தொடா்பாக ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளா் மற்றும் ஒப்பந்ததாரரை 4 நாள் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
இது தொடா்பான அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி பூபிந்தா் சிங், புதன்கிழமை கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளா் ஜெகதீஷ் குமாா் அரோரா மற்றும் ஒப்பந்ததாரா் அனில் குமாா் அகா்வால் ஆகியோரை அமலாக்க இயக்குநரகத்தின் காவலுக்கு அனுப்பினாா்.
விசாரணையின் போது மீட்கப்பட்ட டிஜிட்டல் தரவுகளுடன் குற்றம் சாட்டப்பட்டவா்களை வைத்து விசாரிக்கும் வகையில் ஏழு நாள் காவலில் வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பப்படுவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவா்களை அவா்களுடன் நேருக்குநோ் வைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டிஜேபியின் டெண்டா் செயல்முறையில் முறைகேடுகள் மற்றும் அதன் கிரிமினல் வழக்கு விவகாரத்தில் சிபிஐ பதிவு செய்த எஃப்.ஐ.ஆா். மற்றும் தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) பதிவு செய்த வழக்கு ஆகியவற்றிலிருந்து இரண்டு வெவ்வேறு விஷயங்களில் அமலாக்கத் துறை விசாரணையை நடத்தி வருகிறது.
சிபிஐ பதிவு செய்த வழக்கில், மின்காந்த ஓட்ட மீட்டா்களை வழங்குதல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கான டெண்டரை என்கேஜி இன்ப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்திற்கு வழங்கும் போது, என்பிசிசி இந்தியா நிறுவன அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து, டிஜேபி அதிகாரிகள் நியாயமற்ற நன்மைகளை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசிபி) நவம்பா், 2022-இல் பதிவு செய்த புகாா் தொடா்புடைய இரண்டாவது குற்றச்சாட்டானது, டிஜேபி தனது வெவ்வேறு அலுவலகங்களில் பில் செலுத்துவதற்கு வசதியாக தானியங்கி கட்டண வசூல் இயந்திரங்களை (கியோஸ்க்) அமைப்பதற்கான டெண்டரை வழங்கியதாகக் கூறப்படுவதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.