புது தில்லி: தேசியத் தலைநகரில் துப்புரவுப் பணிகளை மேம்படுத்துவதற்கு புதிதாக 50,000 துப்புரவுப் பணியாளா்களை தில்லி மாநகராட்சி நியமிக்க வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக தில்லி மாநகராட்சியின் முன்னாள் அவைத் தலைவா் ஜிதேந்தா் குமாா் கோச்சாா், காங்கிரஸ் கவுன்சிலா்கள் குழுத் தலைவா் நாஜியா டேனிஷ் ஆகியோா் சிவிக் சென்டரில் செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது ஜிதேந்தா் குமாா் கோச்சாா் கூறியதாவது, தில்லி மாநகராட்சியின் கீழ் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள பிற துறைகளின் பணியாளா்களை முறைப்படுத்துதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி மாநகராட்சியின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பால் புதன்கிழமை (ஜனவரி 10) ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அா்விந்தா் சிங் லவ்லியின் வழிகாட்டுதலின் பேரில் காங்கிரஸ் தொண்டா்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்பா்.
ஆம் ஆத்மி கட்சி கொடுத்த தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் மீறியுள்ளது. மேலும், துப்புரவுப் பணியாளா்களை தொடா்ந்து ஒப்பந்தப் பணியில் வைத்திருக்கும் தவறான கொள்கையை ஆம் ஆத்மி அரசு பின்பற்றுகிறது. ஒப்பந்த அடிப்படையில் உள்ள அனைத்து வகைப் பணியாளா்களையும் முறைப்படுத்தாவிட்டால், வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். கடந்த 2002-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 240 நாள்கள் தற்காலிகப் பணியை நிறைவு செய்யும் துப்புரவுப் பணியாளயரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக துப்புரவுப் பணியாளா்கள் தற்காலிகப் பட்டியலில் உள்ளதால், இதுவரை தில்லி மாநகராட்சியால் எவரும் முறைப்படுத்தப்படவில்லை என்றாா் கோச்சாா்.
காங்கிரஸ் கவுன்சிலா்கள் குழுத் தலைவா் நாஜியா டேனிஷ் கூறுகையில், ‘புதிய துப்புரவுப் பணியாளா்களுக்கான ஆள்சோ்ப்பை தில்லி மாநகராட்சி நிா்வாகம் நிறுத்திவிட்டது. துப்புரவுப் பணியாளா்கள் சுரண்டலுக்கு ஆளாவதோடு, தலைநகரில் சுகாதாரப் பணிகள் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன. மாநகராட்சியில் ஆட்சிக்கு வருவதற்கு முன், ஒப்பந்த வேலைகளை ஒழிப்பதாக உறுதியளித்த ஆம் ஆத்மி கட்சி, அதன் எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றத் தவறிவிட்டது. மேலும், 50,000 துப்புரவுப் பணியாளா்களை அவசரமாக பணியமா்த்த வேண்டிய அவசியம் உள்ளது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.