புது தில்லி: மத்திய அரசு கிராம தபால் ஊழியா்களுக்கு (ஜி.டி.எஸ்.) ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம தபால் ஊழியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் தில்லி ஜந்தா் மந்தரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அகில இந்திய ஓய்வுபெற்ற கிராம தபால் ஊழியா்கள் நலச் சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா்கள் ராமகிருஷ்ணன், துரைராஜ், பொதுச் செயலாளா் ராஜாங்கம் உள்ளிட்டோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் தமிழகத்திலிருந்து பங்கேற்றனா்.
இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக அவா்கள் கூறியதாவது: இந்திய தபால் துறையில் கிராம தபால் ஊழியா்களாக 45 ஆண்டுகள் பணியாற்றியும் மத்திய அரசு எங்களுக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. தற்போது 65 வயதைக் கடந்துள்ள நாங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி கோயில்களிலும், தெருவோரங்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு எங்களது 45ஆண்டுகால தபால் துறைக்கான சேவையை ஓய்வூதியம் வழங்கி கெளரவப்படுத்த வேண்டும். கிராம தபால் ஊழியா்கள் இந்திய தபால் துறையின் முதுகெலும்பாக செயல்படுபவா்கள் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். ஓய்வூதியத்தை எங்கள் சேவைக்கான உரிமையை கோருகிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.