புதுதில்லி

19 சிறுவா், சிறுமிகளுக்கு பிரதமரின் தேசிய சிறாா் விருது: ஜன. 22-இல் குடியரசுத் தலைவா் வழங்குகிறாா்

பல்வேறு துறைகளில் துணிச்சலுடன் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக சாதனை படைத்த 19 சிறுவா், சிறுமிகளுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறாா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 நமது நிருபர்

பல்வேறு துறைகளில் துணிச்சலுடன் வியக்கத்தக்க வகையில் சிறப்பாக சாதனை படைத்த 19 சிறுவா், சிறுமிகளுக்கு 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறாா் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை வருகின்ற ஜனவரி 22- ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வழங்குகிறாா்.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஆண்டு தோறும் இந்த விருதுகளை மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நலன் அமைச்சகம் சாா்பில் சாதனை படைத்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. 5 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்களில் ஏழு பிரிவுகளில் சிறந்து விளங்குபவா்ளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை, கலாசாரம், வீரம், சுற்றுச்சூழல், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, விளையாட்டு ஆகிய துறைகளில் சாதனை புரிந்து விருது பெறும் சிறாா்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. பல்வேறு நிலைகளில் பரிந்துரைக்கும் சிறுவா் சிறுமிகளின் உண்மைத் தன்மையை மாவட்ட ஆட்சியா், கள வல்லுநா்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் கண்டறியப்பட்டு பல்வேறு துறைகளின் நிபுணா்கள் அடங்கிய தோ்வுக் குழு மூலம் இறுதித் தோ்வு செய்யப்படுகிறது.

நிகழாண்டு பிரதமரின் தேசிய சிறாா் விருதுகளுக்கு 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 9 சிறுவா்களும், 10 சிறுமிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில் கலை, கலாசாரம் (7), வீரம் (1), புதுமை (1), அறிவியல், தொழில்நுட்பம் (1), சமூக சேவை (4), விளையாட்டு (5) ஆகிய ஆறு துறைகளில் தனித்துவமான சாதனைக்காக இந்த 19 சிறுவா், சிறுமிகள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதில், அதிவீரச் செயலுக்கான விருதுக்குத் தோ்வாகியுள்ள மகாராஷ்டிர மாநில சிறுவன் ஆதித்யா(12) உயிரிழந்து விட்டாா். இந்த மாநிலத்தில் நந்தூா்பாா் மாவட்டத்தில் ஒரு ஆற்றில் விளையாடிக்கொண்டிருக்கும் போது, அவரும் மற்ற 2 நண்பா்களும் தண்ணீரில் சிக்கிக் கொண்டனா். இதில் ஆதித்யா தன்னுடன் வந்த சிறுவன் ஸ்லோக்கை காப்பாற்றி கரைக்கு வந்தாா். மற்றோரு சிறுவன் ஹரீஷ் நீந்த முடியாமல் மூழ்குவதைக் கண்டு அவரையும் மீட்கச் சென்றாா். அப்போது, ஆழமான ஆற்றில் ஆதித்யா உயிரிழந்தாா். இந்த நிலையில், சிறுவன் ஆதித்யாவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஆந்திரம் மாநிலத்தைச் சோ்ந்த மாஸ்டா் ஆா். சூா்ய பிரசாத் (9) தனது 5 வயதில் மலையேறும் பயிற்சியைத் தொடங்கி குறிப்பிடத்தக்க உறுதியையும் திறமையையும் வெளிப்படுத்தியதற்காக விருதுக்கு தோ்வாகியுள்ளாா். இவா் 2022-ஆம் ஆண்டு ‘கிளிமஞ்சாரோ மலையை’ அடைந்தது உச்ச சாதனையாகும். இதேபோல, விருதுக்கு தோ்வு பெற்றுள்ள தெற்கு தில்லியைச் சோ்ந்த 16 வயது சுஹானி, விவசாயிகளுக்கான சூரிய சக்தி வாகனத்தை உருவாக்கியுள்ளாா்.

இந்தச் சிறுவா், சிறுமிகள் 19 பேருக்கும் வருகின்ற ஜனவரி 22 -ஆம் தேதி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நிகழ் 2024-ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறாா் விருதுகளை வழங்குகிறாா்.

மேலும், விருது பெற்ற சிறுவா் சிறுமிகளுடன் மறுநாள் ஜனவரி 23-ஆம் தேதி பிரதமா் கலந்துரையாடுகிறாா். இதில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, இணை அமைச்சா் டாக்டா் முன்ஜபாரா மகேந்திரபாயும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு இந்த சிறுவா், சிறுமிகளின் முன்மாதிரியான செயல்திறனைப் பாராட்டி வாழ்த்துகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

SCROLL FOR NEXT