முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அதிகார போதையில் இருப்பது தில்லி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவா் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. பான்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளாா்.
கலால் கொள்கை வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது தொடா்பாக பாஜக தேசியத் தலைமையகத்தில் பான்சூரி ஸ்வராஜ் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: கலால் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தொடா்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி வழக்கம் போல் பொது மக்களையும், ஊடகங்களையும் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. அவருக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் போதுமான ஆதாரம் இருப்பதையே உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் கேஜரிவால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவில்லை. மாறாக, அவரைக் கைது செய்தது சட்டவிரோதம் என்று கூறியே நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தாா். இருப்பினும், கேஜரிவால் கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்த அமலாக்கத் துறைக்கு பிரிவு 19-இன் கீழ் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் நம்பியது.
சில நாள்களுக்கு முன்பு, அமலாக்கத் துறை ஒரு விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி, வாட்ஸ்அப் ஆதாரங்கள் மற்றும் பிற உண்மைகளை ஆய்வு செய்ததில், அரவிந்த் கேஜரிவால் கலால் கொள்கை ஊழலில் முக்கியப் பங்கு வகித்துள்ளாா் என்பது தெரியவந்தது. கேஜரிவால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களுடன் நெருங்கிய தொடா்பைக் கொண்டுள்ளாா். மொத்தம் கைமாறிய ரூ.100 கோடியில், ரூ.45 கோடியை ஆம் ஆத்மி கட்சி கோவா தோ்தலில் பயன்படுத்தியது. இதன் மூலம் குற்றப்பத்திரிகையில் சோ்க்கப்பட்ட முதல் கட்சி என்ற பெருமையை ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் எந்தவொரு அரசியலமைப்பு அதிகாரியும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விசாரணை அமைப்புகளை தவறாக வழிநடத்துகிறாா். முதல்வா் நாற்காலியை விட்டு அவா் விலகத் தயாராக இல்லாத
அளவுக்கு அதிகார போதையில் இருக்கிறாா். கேஜரிவாலின் பிடிவாதத்தால் தில்லியில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கேஜரிவாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால ஜாமீன் நிபந்தனைகள் முன்பு அவருக்கு வழங்கப்பட்டதைப் போலவே உள்ளன. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றாா் பான்சூரி ஸ்வராஜ்.