மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
மேற்கு வங்கத்தின் 2-ஆம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.26 மற்றும் 27-ஆம் தேதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்வாா் என அக்கட்சி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியின் அழைப்பின் பேரில், அரவிந்த் கேஜரிவால் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.
இது தொடா்பாக கேஜரிவால் புதன்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மம்தா பானா்ஜி இந்திய ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான முக்கியமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவருடன் தொலைப்பேசியில் புதன்கிழமை உரையாடியபோது எனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தேன் என குறிப்பிட்டிருந்தாா்.
Advertisement
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்.29-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.