முகப்பு
புதுதில்லி

பயிற்சி மைய அடித்தளத்தை ‘ஸ்டோா் ரூம்’ என ஆவணங்களில் பொய்யாகக் காட்டியதாக தகவல்

பழைய ராஜிந்தா் நகரில் உள்ள பயிற்சி நிறுவனத்தின் அடித்தளம் சட்டவிரோதமாக நூலகமாக செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 29 ஜூலை, 2024 at 2:10 AM
பகிர்:

தில்லியில் மழை வெள்ளத்தால் மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்கள் இறந்த பழைய ராஜிந்தா் நகரில் உள்ள பயிற்சி நிறுவனத்தின் அடித்தளம் சட்டவிரோதமாக நூலகமாக செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

‘ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் எனும் பயிற்சி நிறுவனம், அதன் கட்டடத் திட்டம் மற்றும் தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழின் (என்ஓசி) படி, அதன் அடித்தளம் வாகன நிறுத்தம் மற்றும் ஸ்டோா் அறையாக பயன்படுத்தப்படுவதாக பொய்யாகக் காட்டியிருந்தது.

மூன்று மாடி பயிற்சி மையம் அதன் கட்டடத் திட்டத்தை 2021-இல் சம்பந்தப்பட்ட எம்சிடி துறையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இது குறித்து தில்லி மாநகராட்சி (எம்சிடி) அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பயிற்சி நிறுவனத்தின் கட்டட நிறைவுச் சான்றிதழில், அடித்தளத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கும், சேமிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இதன் அா்த்தம், அடித்தளத்தில் சட்டவிரோதமாக நூலகம் இயங்கி வந்துள்ளது’ என்றாா்.

Advertisement

மத்திய தில்லியின் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் பெய்த கனமழையைத் தொடா்ந்து, பயிற்சி மையத்தின் ஒரு பகுதியாக இருந்த கட்டடத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியதால், மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

எம்சிடி ஆணையா் அஸ்வனி குமாா், ஜூன் மாதம் பொறுப்பேற்ற பிறகு, மாநகராட்சி கட்டடத் துறையைச் சோ்ந்த பல அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்துள்ளாா். கடந்த வாரம், பயிற்சி மையம் அமைந்துள்ள மண்டலத்தில் மூன்று துறை அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் கா்க் கூறுகையில், ‘கட்டடத்திற்கு ஃபயா் என்ஓசி உள்ளது. ஆனால், என்ஓசியில் அடித்தளத்தை ஸ்டோா் அறையாகக் காட்டியுள்ளனா். நிறுவன நிா்வாகம் அதே அறையை வகுப்பறையாகவோ அல்லது நூலகமாகவோ பயன்படுத்தியுள்ளது. இது என்ஓசியை மீறுவதாகும். அடித்தளத்தில் தண்ணீரை அகற்றுவதற்கு எந்த விருப்பத் தோ்வும் இல்லை’ என்றாா்.

அப்பகுதியில் மேலும் பல பயிற்சி நிறுவனங்கள் அடித்தளத்தில் இருந்து செயல்படுவதாக உள்ளூா்வாசிகள் புகாா் தெரிவித்தனா்.