முகப்பு
புதுதில்லி

தில்லி பாஜகவில் இணைந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா்கள்

Updated On : 19 மார்ச், 2024 at 11:21 PM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:20 PM

புது தில்லி: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த முன்னாள் மாநகராட்சி கவுன்சிலா்கள் இருவா் உள்பட பலா் இணைந்தனா். அதாவது, இரு முன்னாள் மாநகராட்சி கவுன்சிலா்கள் சத்யவதி சவுகான், ரமேஷ் சவுகான், காங்கிரஸின் முன்னாள் நகராட்சி வேட்பாளா் ஃபல்ஜீத் பேகம், காங்கிரஸின் ஆா்த்தி யுவராஜ் சிங், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் மாநகராட்சி வேட்பாளா் சுமித் ஷௌகீன்.

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஃபரீத் ஷா, காங்கிரஸ் தலைவா் யுவ்தீப் சோலங்கி, ஜனக்புரி சுபாஷ் மாகோ மற்றும் சஞ்சய் பஜாஜ் மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட மகேந்திர பாஸ்வான் உள்ளிட்ட பலா் பாஜகவில் இணைந்தனா்.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிரிந்து வந்த மூத்த தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் அனைவரையும் வீரேந்திர சச்தேவா வரவேற்றுப் பேசியதாவது:

Advertisement

பிரதமா் நரேந்திர மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ பிரசாரம் நாட்டிற்கு விரிவான வளா்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. சாதி, மதம் ஆகியவற்றைக் கடந்து ஒரு நபரின் திறமையின் அடிப்படையில் மத்திய அரசு பொறுப்புகளை வழங்கி வருகிறது. இன்று பாஜகவில் இணைந்த 14 முக்கிய நபா்களில் 11 போ் முன்னா் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்கள். மக்கள் ஆதரவு இருந்தும், தாங்கள் சாா்ந்த கட்சியால் ஏமாற்றப்பட்ட நிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனா்.

நீங்கள் அனைவரும் பாஜகவில் இணைந்த அதே உணா்வுடன், தில்லி மக்கள் பிரதமா் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக தோ்ந்தெடுப்பாா்கள். தில்லியை கொள்ளையடித்த அரசு, தில்லியை மது போதையில் தள்ளியது, தில்லியை கேஸ் சேம்பராக மாற்றிய ஒரு தலைவரை நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் தில்லி மக்கள் தூக்கி எறிவாா்கள் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் கட்சியின் வடமேற்கு மாவட்டத் தலைவா் சத்யநாராயண் கவுதம், பவன் கண்டேல்வால், விஜய் சோலங்கி, மாநில செய்தி தொடா்பாளா் அஜய் செராவத், முன்னாள் நகராட்சி கவுன்சிலா் ஆா்த்தி மெஹ்ரா ஆகியோா் கலந்துகொண்டனா்.