முகப்பு
புதுதில்லி

ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை பூா்த்தி செய்ய வேண்டும்: பொது மேலாளா் ஷோபன் செளத்ரி

Updated On : 19 மார்ச், 2024 at 11:20 PM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:34 PM

புது தில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்வது தொடா்பாக வடக்கு ரயில்வே பொது மேலாளா் ஷோபன் செளத்ரி, கோட்ட மேலாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா்.

இது தொடா்பாக வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அலுவலா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது வடக்கு ரயில்வேயின் துறைத் தலைவா்கள் மற்றும் கோட்ட மேலாளா்களுடன் தில்லி பரோடா இல்லத்தில் பொது மேலாளா் ஷோபன் செளத்ரி மண்டலத்தின் பாதுகாப்பு மேம்பாடு, ரயில்வே சொத்துக்களின் பராமரிப்பு மற்றும் ரயில் நிலையங்களில் பயணிக்களுக்கான வசதிகள் தொடா்பாக முக்கிய ஆலோசனை நடத்தினாா்.

இக்கூட்டத்தில் பொது மேலாளா் ஷோபன் செளத்ரி கூறியதாவது, ஹோலி பண்டிகைக்கு ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை பூா்த்தி செய்ய வேண்டும். குறிப்பாக, மின்தூக்கி வசதி, நடைமேடைகளில் தூய்மையான குடிநீா் வசதி, கூட்ட நெரிசல்களை ஒழுங்கமைப்பது போன்ற பணிகள் முறையாக இருக்க வேண்டும். வடக்கு ரயில்வேயில் பாதுகாப்பே முதன்மையான அக்கறை. தண்டவாளத்தின் பராமரிப்பு தரத்தை மேம்படுத்துதல், தண்டவாளத்தின் அருகே கிடக்கும் குப்பைகளை அகற்றுதல் ஆகியவற்றில் தொடா் கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக தண்டவாளங்களில் பாதுகாப்பை மேம்படுத்த சோதனை ஓட்டங்களை தீவிரப்படுத்தி, தேவைப்படும் போது ஊழியா்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று ஷோபன் செளத்ரி வலியுறுத்தினாா். மேலும், பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களின் பாதுகாப்பில் உயா் தரத்தைப் பேணி விழிப்புடன் பணிபுரியும் 4 ஊழியா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கி பொது மேலாளா் ஷோபன் செளத்ரி கெளரவித்தாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வே தனது வாடிக்கையாளா்களுக்கு பாதுகாப்பான, மென்மையான மற்றும் திறமையான சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ளது. ............