அடிப்படை வசதிகளை எதிர்நோக்கும் ஆவடி தொகுதி மக்கள்!
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் உள்ளனர்.
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தொகுதி மக்கள் உள்ளனர்.
ஆவடி ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பெரும்பாலான பயணிகள் வெளியூர் செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களில் பயணிக்கின்றனர். அங்கிருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் ஆவடி ரயில் நிலையம் வழியாகத்தான் செல்கின்றனர். எனவே, பயணிகளின் வசதிக்காக ஆவடி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆவடி சிடிஹெச் சாலை-நேரு அங்காடியை இணைக்கும் தண்டவாளப் பகுதியைக் கடக்க சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். இளைஞர்களின் தேவைக்காக ஆவடியில் நவீன வசதியுடன் கூடிய விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.
Advertisement
போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் சிடிஹச் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பட்டாபிராம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள சாலைகளை அகலப்படுத்தி, வாகன ஓட்டிகளின் சிரமத்தைக் குறைக்க வேண்டும்.
மேலும், ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், பெண்கள், வேலைக்குச் செல்வோரின் வசதிக்காக சிற்றுந்து போக்குவரத்து ஏற்படுத்தித் தர வேண்டும். சத்தியமூர்த்தி நகர் துணை மின் நிலையத்தை தர உயர்த்த வேண்டும்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமுல்லைவாயல் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
திருமுல்லைவாயல், கோயில் பதாகை கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய அம்பத்தூர் செல்ல வேண்டியதுள்ளது. கிராம மக்களின் சிரமத்தைப்போக்க ஆவடியில் பத்திரப் பதிவு அலுவலகம் அமைக்க வேண்டும். திருவேற்காடு, திருநின்றவூர் பகுதிகளில் புதைசாக்கடை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டங்களை செய்து தர வேண்டும். திருவேற்காடு பேருந்து நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அரசு, ஆவடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆவடி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.