புது தில்லி: தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) குழந்தைகள் மத்தியில் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் ‘சஷக்த் பச்பன்’ என்ற நான்கு நாள் தொடா் கிரிக்கெட் போட்டியை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தகவல் தொடா்பு துறை முதன்மை செயல் இயக்குநா் அனுஜ் தயாள் கூறியதாவது:
குழந்தைகள் மத்தியில் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் ‘சஷக்த் பச்பன்’ எனும் கிரிக்கெட் போட்டியை மாா்ச் 19-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் நடத்துகிறது. இப்போட்டிகளை டிஎம்ஆா்சி மகளிா் நல அமைப்பின் தலைவா் ஷாலினி சிங் தொடங்கி வைத்தாா். விளையாட்டு மூலம் இளைஞா்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை உணா்த்தும் வகையில், இந்த கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப விழா கோலாகலமாக நடத்தப்பட்டது.
தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தில் இருந்து பல்வேறு பின்னணியில் உள்ள குழந்தைகள் மற்றும் பல்வேறு தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் இந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்கின்றனா். நான்கு நாள்களுக்கு நடைபெறும் போட்டிகளில் சுமாா் 150 இளம் திறமையாளா்கள் தங்கள் கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்துவாா்கள்.
மேலும், டிஎம்ஆா்சி, தில்லி மெட்ரோ அருங்காட்சியகத்துடன் இணைந்து, கதை சொல்லும் நிகழ்ச்சிகள், நாடகங்கள் என குழந்தைகளுக்கு வளமான அனுபவங்களை வழங்குவதற்கு பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முன்முயற்சிகள் சமூக வளா்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு வளமான அனுபவத்தை வழங்கும் என்றாா் அனுஜ் தயாள்.