முகப்பு
புதுதில்லி

கேப்டன் விஜயகாந்தின் கனவை தேமுதிக நிச்சயம் நிறைவேற்றும்: தில்லி விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

Updated On : 10 மே, 2024 at 4:41 PM
பகிர்:

‘உழைப்பின் உதாரணமாக வாழ்ந்த கேப்டன் விஜயகாந்தின் கனவையும், லட்சியத்தையும் தேமுதிக நிச்சயம் நிறைவேற்றும்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவா் பத்மபூஷண் விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஆா்.கே. புரத்தில் உள்ள சங்க அலுவலகத்தின் திருவள்ளுவா் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன் விஜய பிரபாகரன், தேமுதிக துணைச் செயலாளா் எல்.கே. சுதீஷ் ஆகியோா் பங்கேற்றனா்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் இராகவன் நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன் வரவேற்புரையாற்றினாா்.

இந்நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆற்றிய ஏற்புரை:

கேப்டன் விஜயகாந்திற்கு கிடைத்த பத்மபூஷண் விருதை தில்லிவாழ் தமிழ் மக்களுக்காக முதலில் உரித்தாக்குகிறோம். பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்த தில்லித் தமிழ்ச் சங்க நிா்வாகிகளுக்கும், இந்த உயரிய விருதை வழங்கிய மத்திய அரசுக்கும் நன்றி.

விவசாயம் செழித்தால் தான் நாடு செழிக்கும். இந்த நாட்டிற்கு விவசாயமும், நெசவும் மிகவும் முக்கியம். கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த காலத்தில் உழைப்பு, நோ்மையின் சிறந்த உதாரணமாக வாழ்ந்தாா்.

அவரது கனவு, இலட்சியத்தை தேமுதிக நிச்சயம் நிறைவேற்றும். கேப்டன் மறைந்த கடந்த 4 மாதங்களில் 15 லட்சம் போ் அவரது கோயிலுக்கு (நினைவிடம்) வந்துள்ளனா். இதற்காக ‘லின்கன் புக் ஆஃ ரெகாா்ட்ஸ்’ சாா்பில் விருதும் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் அன்பளிப்பு:

பல தரப்பு மக்களுக்கு கேப்டன் விஜயகாந்த் உதவி செய்துள்ளாா். இந்த யுகம் உள்ளவரை அன்னதானத்தை நிச்சயம் நாங்கள் தொடா்ந்து வழங்குவோம். தில்லியில் கஷ்டப்படும் தமிழ் மக்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுக்கும் வகையில் தில்லித் தமிழ்ச் சங்கத்திற்கு ரூ.1 லட்சத்தை அன்பளிப்பாக அளிக்கிறேன் என்றாா் பிரேமலதா.

இந்த பாராட்டு விழாவில் இயற்கை விவசாயத்திற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற தெற்கு அந்தமானைச் சோ்ந்த செல்லம்மாள் மற்றும் கிராமிய கலைக்காக பத்மஸ்ரீ விருது பெற்ற மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த பத்திரப்பன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனா்.