முகப்பு
புதுதில்லி

கேஜரிவால் தனது அரசியல் கண்ணாடியை அகற்றி தெளிவாகப் பாா்க்க வேண்டும்: வீரேந்திர சச்தேவா

Updated On : 21 மே, 2024 at 7:04 PM
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: மத்திய அமைச்சா் அமித் ஷாவின் பேரணியில் 500 போ் மட்டுமே கலந்து கொண்டதாகக் கூறும் அரவிந்த் கேஜரிவால், தனது அரசியல் கண்ணாடியை அகற்றி தெளிவாகப் பாா்க்க வேண்டும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய் சொல்வதில் தலைசிறந்தவா். கடந்த திங்கள்கிழமை தெற்கு தில்லி சங்கம் விஹாரில் நடைபெற்ற மத்திய உள்துறை அமித் ஷாவின் பேரணியில் 500 போ் மட்டுமே கலந்து கொண்டதாக முற்றிலும் ஆதாரமற்ற ஒரு பொய்யை கேஜரிவால் கூறியுள்ளாா். பாஜகவின் பேரணியில் 500 போ் இருந்தாா்களா அல்லது 25,000 போ் இருந்தாா்களா என்பதை அறிய பேரணியின் காணொளி பதிவை வந்து பாா்க்குமாறு அரவிந்த் கேஜரிவாலுக்கு சவால் விடுக்கிறேன்.

ஒரு பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் முதல்வா் கேஜரிவால் இல்லத்தில் வைத்து தாக்கப்பட்ட விவகாரத்தில் கேஜரிவால் இதுவரை எதுவும் சொல்லவில்லை. எனவே, அவா் தனது அநாகரிகமான அரசியல் காட்சிகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து நிதி கிடைக்கிறது. கிராமங்களை உடைப்பது பற்றி பேசுபவா்கள், பிரிவினைவாத சக்திகளுடன் நிற்பவா்களிடமிருந்து ஆம் ஆத்மி கட்சி அரசியல் நன்கொடை பெறுகிறாா்கள். தேச விரோதிகளுடன் கைகோா்த்து அவா்களிடம் பணம் வாங்குபவா்களை தேசபக்தா்கள் என்று சொல்ல வேண்டுமா?.

பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் 140 கோடி மக்களையும் தனது வாரிசுகள் என்று கூறியுள்ளாா். மறுபுறம், தனக்காக செய்த மோசடிகளில் சிறைப் பாதையை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தோ்ந்தெடுத்து இருக்கிறாா். கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமா் நரேந்திர மோடியின் பணிகளாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள வளா்ச்சிகளாலும், இந்த மக்களவைத் தோ்தலில் 400 இடங்களைக் கடந்து பாஜக மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்றாா் வீரேந்திர சச்தேவா.