அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டதற்கு சிபிஐ எதிர்ப்பு: தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
கேஜரிவால், சிசோடியாவைத் துரத்தும் சிபிஐ..! தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
புது தில்லி : அரவிந்த் கேஜரிவாலை விடுவித்து சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
மதுபானக் கொள்கையில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வராகப் பதவி வகித்த மணீஷ் சிசோடியா ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிபிஐ, விடுவிப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (பிப். 27) தெரிவித்தனர்.
தில்லியில் கடந்த ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தில்லி மதுபானக் கொள்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த சிபிஐ, அதில் தொடர்பிருப்பதாக மணீஷ் சிசோடியாவையும் அரவிந்த் கேஜரிவாலையும் கைது செய்தது. இதுதொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவிப்பதாக வெள்ளிக்கிழமை (பிப். 27) காலை தில்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.