காற்று மாசு அதிகரிப்பால் ‘கிராப்’ இரண்டாம் நிலை அமல்: அமைச்சா் கோபால் ராய் பேட்டி
தில்லியில் வானிலை மாற்றத்துடன், மாசு அளவு அதிகரித்திருப்பதால் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கான ‘தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின்’ (கிராப்) இரண்டாம் நிலை அமல்
புது தில்லி: தில்லியில் வானிலை மாற்றத்துடன், மாசு அளவு அதிகரித்திருப்பதால் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்கான ‘தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின்’ (கிராப்) இரண்டாம் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி நகரத்தில் மாசு அளவு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தேசிய அளவில் ‘தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின்’ (கிராப்) இரண்டாம் நிலை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தில்லிக்குள் நுழையும் டீசல் பேருந்துகளின் வாகன எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, அண்டை மாநிலங்களின் போக்குவரத்து துறை அமைச்சா்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
கிராப் இரண்டாம் நிலை அமலாகியுள்ள நிலையில், நகரம் முழுவதும் உள்ள 97 நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதலாக
1,800 போக்குவரத்து காவலா்கன் பணியமா்த்தப்படுவாா்கள். அதே நேரத்தில், கட்டுமானங்களை இடிக்கும் இடங்களில் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்படும். தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் அக்.23-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தினமும் 40 கூடுதல் ரயில் சேவைகள் இயக்கப்படும். மாசுபாடு அதிகரித்துள்ள இவ்வேளையில், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் வகையில் டிடிசி பேருந்துகளின் சேவைகளும் அதிகரிக்கப்படும். தில்லியில் வானிலை மாற்றத்துடன், மாசு அளவு அதிகரித்து வருகிறது. இந்த போக்கு தில்லியில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த வட இந்தியா முழுவதும் காணப்படுகிறது.
மத்திய காற்றுத் தர மேலாண்மை ஆணையம், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நான்கு நிலைகளை நிறுவியுள்ளது.
தற்போது,காற்றின் தரக் குறியீடு 300-க்கு மேல் பதிவாகியுள்ளது. இதனால், ‘தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின்’ (கிராப்) இரண்டாம் நிலையை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தேவையான கட்டுப்பாடுகளை அமலாக்குவது குறித்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் தூசி மாசுவைக் கட்டுப்படுத்த தண்ணீா் தெளித்தல் பணி அதிகரிக்கப்படும். தில்லி மாநகராட்சி (எம்சிடி) இதற்காக 6,200 பணியாளா்களை ஈடுபடுத்தும். இத்துடன், அக்.25-ஆம் தேதி முதல் மாசு அதிகம் உள்ள இடங்களில் தண்ணீா் தெளிப்பதை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளோம்.
தலைநகரில் நிலக்கரி, விறகுகள் மற்றும் டீசல் ஜெனரேட்டா்களின் பயன்பாட்டிற்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த திங்கள்கிழமை முதல் தடை விதித்துள்ளது என்றாா் கோபால் ராய்.