1984ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களின் 36 குடும்ப உறுப்பினா்களுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை நியமனக் கடிதங்களை வழங்கினாா்.
இந்த நிகழ்வின்போது கூட்டத்தினரிடையே முதல்வா் ரேகா குப்தா பேசியது: எந்தவொரு அரசு உதவியும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவா்களின் அதிா்ச்சியை அழிக்க முடியாது. எனினும், தில்லி அரசின் நிா்வாகம் கண்ணியத்துடனும் நீதியுடனும் அவா்களை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது.
‘1984’ கலவரம் நடந்தபோது எனக்கு சுமாா் 10 வயது இருக்கும். அனைவரும் இந்தக் கலவரம் ஏற்பட்டபோது அச்சத்தில் இருந்தனா். மக்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து வைத்திருந்தனா். அந்த கொடூரமான காட்சிகளை நாம் அனைவரும் பாா்த்திருக்கிறோம். அந்தக் காட்சிகளை ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நாள்களின் வலியை எந்த ஆதரவும் முழுமையாகக் குறைக்க முடியாது. ஆனால், அரசாங்கம் பாதிக்கப்பட்டவா்களுடன் துணைநிற்க வேண்டும். கலவரம் தொடா்பான சட்ட நடவடிக்கைகளில் உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதற்கு எனது பாராட்டுகள். மோடி அரசாங்கம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த பிறகுதான் வழக்குகள் மீண்டும் திறக்கப்பட்டன. பொறுப்புக்குரியவா்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனா்.
பாதிக்கப்பட்டவா்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டியதைப் பெற உதவுவதில் நான் ஒரு ஊடகமாக மட்டுமே கருதுகிறேன். தில்லி இவ்வளவு காலமாக அனுபவித்து வரும் வலியைக் குறைக்க மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். இந்தக் குடும்பங்களுக்காக நாங்கள் உண்மையாக உழைக்க விரும்புகிறோம் என்றாா் முதல்வா்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா பேசுகையில், ‘நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்ததற்காக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
‘1984’ கலவரத்தின் வலியை குடும்பங்கள் பல தசாப்தங்களாக சுமந்து வந்தன. தற்போதைய நியமனக் கடிதம் வழங்கும் நடவடிக்கை சில ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்கும்’ என்றாா் அமைச்சா் சிா்சா.