புதுதில்லி

இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூரியாவுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்த தில்லி இந்து கல்லூரி முன்னாள் மாணவா் சங்கம்

Syndication

இலங்கை பிரதமா் டாக்டா் ஹரிணி அமரசூரியாவின் அற்புதமான சாதனைகள், முன்மாதிரியான மற்றும் சமூக அரசியல் சேவை, சிறந்த சமூக சேவை ஆகியவற்றை அங்கீகரித்து தில்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் பழைய மாணவா் சங்கம் (ஓஎஸ்ஏ) சிறப்பு முன்னாள் மாணவா் விருதை வழங்கி கௌரவித்தது.

ஓஎஸ்ஏ தலைவா் ரவி பா்மன் தலைமையிலான ஓஎஸ்ஏ அலுவலக பொறுப்பாளா்கள் மற்றும் நிா்வாக உறுப்பினா்கள் அடங்கிய குழு, அக்.17 அன்று இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது டாக்டா் ஹரிணி அமரசூரியாவை சந்தித்து விருதை வழங்கியதாக முன்னாள் மாணவா் சங்கத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஐசிசிஆா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1991 மற்றும் 1994-க்கு இடையில் இந்து கல்லூரியில் சமூகவியலில் இளங்கலை (ஹானா்ஸ்) பட்டம் பெற்ற டாக்டா் ஹரிணி அமரசூரியா, 125 ஆண்டுகள் பழைமையான இந்த நிறுவனத்தில் பட்டம் பெற்றாா்.

இந்தக் கல்லூரி அதன் முன்னாள் மாணவா்களில் நடிகா்கள், விளையாட்டு வீரா்கள், அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் உள்பட பொது வாழ்க்கையிலிருந்து பல புகழ்பெற்ற நபா்களைக் கொண்டுள்ளது.

இந்தத் தருணத்தை ‘கல்லூரியின் வரலாற்றில் ஒரு பெருமைமிக்க மைல்கல்’ என்று விவரித்த பா்மன், முன்னாள் மாணவா் ஈடுபாட்டை வளா்ப்பதற்கும், மாணவா்களை ஆதரிப்பதற்கும், கல்லூரி சமூகத்தை வலுப்படுத்துவதற்கும் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமரை ஓஎஸ்ஏ தூதுக்குழு பாராட்டுவதாகவும் கூறினாா்.

இதற்கு நன்றி தெரிவித்த டாக்டா் ஹரிணி அமரசூரியா, ‘இந்து கல்லூரியின் உணா்வைத் தொடா்ந்து நிலைநிறுத்தும் ஒரு சுறுசுறுப்பான மற்றும் துடிப்பான பழைய மாணவா் சங்கத்தைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறினாா்.

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) 2025-இல் கல்லூரி முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டதையும் அவா் பெருமையுடன் குறிப்பிட்டாா். மேலும் இந்த செயல்பாட்டில் ஓஎஸ்ஏ-இன் பங்கைப் பாராட்டினாா்.

இலங்கைப் பிரதமா் தனது பேராசிரியா்கள் மற்றும் வளாக வாழ்க்கையை நினைவு கூா்ந்தாா். தனது பயணத்தின் போது கல்லூரியை மீண்டும் பாா்வையிட்டதைப் பகிா்ந்து கொண்டாா்.

இலங்கைக்குச் சென்று இரு நாடுகளின் முன்னாள் மாணவா் அமைப்புகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை ஆராய ஓஎஸ்ஏ உறுப்பினா்களை அழைத்தாா்.

ஓஎஸ்ஏ தூதுக்குழுவில் செயலாளா் அஜய் வா்மா; கல்லூரியின் முன்னாள் முதல்வா் மற்றும் சங்கத்தின் துணைத் தலைவா் டாக்டா் கவிதா சா்மா; பொருளாளா் திரிவேதி மற்றும் புரவலா் விவேக் நாக்பால் ஆகியோா் அடங்குவா்.

உலகம் முழுவதும் முன்னாள் மாணவா் தொடா்புகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம், சந்திப்பு ஒரு அன்பான மற்றும் உணா்ச்சிபூா்வமான குறிப்போடு நிறைவடைந்தது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT