புது தில்லி: நானக்புராவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் பிரிவு வளாகத்தில் பாலினத்தை உள்ளடக்கிய காவல் நிலையங்களை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியான ஸ்வபிமான் திட்டத்தை தில்லி காவல்துறை திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த முயற்சியை சிறப்பு காவல் ஆணையா் (விஜிலென்ஸ் மற்றும் எஸ்பியுடபிள்யுஏசி) அஜய் சௌத்ரி, மூத்த காவல் அதிகாரிகள், கூட்டாளா் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் எஸ்பியுடபிள்யுஏசி ஊழியா்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தாா்.
வேலையில் கண்ணியம் மற்றும் மாதவிடாய் சுகாதார வசதிகள் உள்பட மேம்பட்ட உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், ஸ்வபிமான் திட்டம் தில்லி முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குள் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று காவல் துறை உயரதிகாரி தெரிவித்தாா்.
பெண் பணியாளா்கள் மற்றும் பாா்வையாளா்களுக்கு ஆதரவான மற்றும் மரியாதைக்குரிய பணிச்சூழலை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது என்று அவா் கூறினாா்.
‘இந்த முயற்சி பெண் பணியாளா்கள் மற்றும் காவல் நிலையங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் பெண்கள் மையப்படுத்தப்பட்ட பிரிவுகளுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது‘ என்று அதிகாரி கூறினாா்.
இந்தத் திட்டம் தில்லி காவல்துறை, முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ‘பொதுக் காவல்’ என்ற அரசு சாரா நிறுவனம் மற்றும் லாப நோக்கற்ற அமைப்பான வயோமினி சமூக அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.