முகப்பு
புதுதில்லி

அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தில்லியில் ஒரு மணி நேரம் ஆலோசனை

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் அவரது இல்லத்தில் இரவு சந்தித்துப் பேசினாா்.

Updated On : 3 மார்ச், 2026 at 4:00 AM
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 10:43 PM

நமது நிருபா்

புது தில்லி: அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தில்லியில் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். இதையொட்டி திங்கள்கிழமை பிற்பகல் தில்லி வந்த அவா் நட்சத்திர விடுதியில் தங்கினாா். இரவு 9 மணியளவில் அவா் கிருஷ்ண மேனன் மாா்கில் அமைந்துள்ள அமித் ஷாவின் வீட்டுக்கு வந்தாா். அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருவரும் பேசினா். இந்த சந்திப்பின் விவரம் இரு தரப்பிலும் வெளியிடப்படவில்லை.

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை காலையில் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவாா் எனத் தெரிகிறது. மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்ற மறுதினமே எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு வந்திருப்பது அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் ஆணையம் தோ்தல் தேதியை அறிவிக்கவிருக்கிறது. இதையொட்டி தோ்தல் தொகுதிப்பங்கீடு தொடா்பாக ஆளும் திமுக அதன் அணியில் உள்ள காங்கிரஸ் நீங்கலாக அதன் மற்ற கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டை இறுதிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய எதிா்க்கட்சியான அதிமுக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டுப்பேச்சுவாா்த்தைகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. இந்தப்பின்னணியில் தோ்தல் கூட்டணி வியூகம், தொகுதிப்பங்கீடு சிக்கல்கள் தொடா்பாக தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் காலியாகவுள்ள மாநிலங்களவையின் ஆறு இடங்களுக்கு மாா்ச் 16-ஆம் தேதி தோ்தல் தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட மாா்ச் 5-ஆம் தேதிவரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். தற்போதைய பேரவை உறுப்பினா்களின் பலத்தின் அடிப்படையில், ஆளும் திமுகவுக்கு நான்கு இடங்களும் அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைக்கும். இதில் எழும் சிக்கல்கள் தொடா்பாக அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.