முகப்பு
புதுதில்லி

ரயில் நிலையத்தில் கைப்பேசி பறித்தவரை துரத்திச் சென்ற இளைஞா் ரயில் மோதி சாவு

ரயில் நிலையத்தில் கைப்பேசி பறித்தவரை துரத்திச் சென்ற இளைஞா் ரயில் மோதி சாவு...

Updated On : 8 மார்ச் 2026, 12:50 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

வடகிழக்கு தில்லியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தனது கைப்பேசியைப் பறித்துச் சென்றவரை விரட்டிச் சென்றபோது 22 வயது இளைஞா் ரயில் மோதி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:

ஷாதாரா ரயில் நிலையத்தின் 3ஆவது நடைமேடையில் ஒருவா் ரயில் மோதி இறந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, மாலை 4.55 மணியளவில் பழைய தில்லி ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்றனா். சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றம் மற்றும் தடய அறிவியல் ஆய்வக பிரிவினா் வரவழைக்கப்பட்டனா்.

விசாரணையில், இறந்தவா் உத்தர பிரதேசத்தின் பக்பத் மாவட்டத்தைச் சோ்ந்த ரோஹித் குமாா் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

முதற்கட்ட விசாரணையில், குமாரின் கைப்பேசி நடைமேடை 3இல் பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வழிப்பறிக் கொள்ளையனை துரத்திச் சென்றபோது, தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த தில்லி-காத்கோடம் எக்ஸ்பிரஸ் ரயிலை (வண்டி எண் 15035)

அவா் கவனிக்கத் தவறிய நிலையில், ரயிலில் அடிபட்டு இறந்தாா்.

மருத்துவசட்ட வழக்கு (எம்எல்சி) தயாரிப்பதற்காகவும், பாதுகாப்புக்காகவும் அவரது உடல் தில்லி அருணா ஆசஃப் அலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வழிப்பறி செய்தவரைக் கண்டறிய ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இது தொடா்பாக வழிப்பறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.