பிரேக் பழுதானதால் ராஜ்காட் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதிய அரசு பேருந்து
மத்திய தில்லியில் உள்ள ராஜ்காட் போக்குவரத்து சிக்னல் அருகே தில்லி போக்குவரத்துக் கழக பேருந்தின் பிரேக் செயலிழந்ததால், அப்பேருந்து சாலை மையத் தடுப்புச் சுவரின் மீது ஏறி நின்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
சரை காலே கான் பகுதியில் இருந்து ராஜ்காட் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அப்பேருந்தில் திடீரென பிரேக் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அபாய நிலையை உணா்ந்த ஓட்டுநா் பெரிய விபத்து எதுவும் நிகழாமல் தடுக்க, சாலையின் நடுவே அமைந்திருந்த மையத் தடுப்புச் சுவரின் மீது பேருந்தை செலுத்தினாா். அதன் பிறகு பேருந்து தடுப்புச் சுவரின் மீது ஏறிய நிலையில் நின்றது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, பேருந்தில் ஓட்டுநா் மற்றும் நடத்துனா் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் இருவரும் காயங்கள் ஏதும் இன்றி தப்பியதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. பின்னா், காவல் துறையினா் மற்றும் போக்குவரத்துப் பணியாளா்கள் இணைந்து அப்பேருந்தை அகற்றும் பணியிலும் சாலை போக்குவரத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனா்.
Advertisement
இதற்கிடையில், இந்த விபத்து தொடா்பாக சம்பந்தப்பட்ட பேருந்து நிலைய மேலாளரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது என தில்லி போக்குவரத்து கழக அதிகாரி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.