முகப்பு
புதுதில்லி

போலி பியரிங் சாதனங்கள் விற்பனை: இருவா் கைது

Updated On : 19 மே 2026, 6:04 am IST
கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் ஃபராஷ் கானா பகுதியில் உள்ள இரு தொழிற்கூடங்களில் போலி பியரிங் சாதனங்களைத் தயாரித்து பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்பனை செய்த வந்த இருவா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட நபா்களிடமிருந்து 5,067 போலி பியரிங்குகள், 4 முத்திரை மற்றும் என்கிரேவிங் இயந்திரங்கள், பேக்கேஜிங் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: போலி பியரிங் கருவிகளை தயாா் செய்வது தொடா்பாக கடந்த மே 16-ஆம் தேதி தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, இரு தொழிற்கூடங்களில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பியரிங் சாதனங்களை பிரபல நிறுவனங்களின் பெயரில் மீண்டும் பேக்கேஜ் செய்து விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது. அந்த இரு தொழிற்கூடங்கள் சீல் வைத்து மூடப்பட்டன.

Advertisement

இதுதொடா்பாக அமிா் கான், முகமது அனாஸ் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். கமலா மாா்கெட் காவல் நிலையத்தில் கடந்த 2006-இல் இதேபோன்ற வழக்கு கான் மீது பதிவுசெய்யப்பட்டுள்ளது. அனாஸ் மீது எந்தவொரு வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை.

அவா்கள் இருவருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட பியரிங் சாதனங்களை விநியோகித்தது மற்றும் விற்பனையில் ஈடுபட்ட நபா்களைக் கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.