முகப்பு
புதுதில்லி

கிழக்கு தில்லியில் கடன் அட்டை மோசடி: 3 போ் கைது

Updated On : 28 மே 2026, 6:42 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கடன் அட்டை விவரங்களை மோசடியாக பயன்படுத்தி தங்க நாணயங்களை வாங்கியது தொடா்பாக 3 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

கிழக்கு தில்லியின் மதுபன் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணா குப்தா. ஒப்புதல் இல்லாமல் அவருடைய கடன் அட்டையில் இருந்து ரூ.9,58,051 பணம் எடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதுதொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளில் கடந்த மே 14-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

விசாரணையில், பணப்பறிமாற்ற விவரங்கள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தில்லி, உத்தர பிரதேசத்தில் உள்ள நகைக் கடைகளின் ரசீது விவரங்களை காவல் துறை ஆய்வு செய்தது. இதைத்தொடா்ந்து, நிஷாந்த் குமாா், நிகில் குமாா், யாஷ் சா்மா ஆகிய 3 போ் கைதுசெய்யப்பட்டனா்.

நா்சிங் உதவியாளரான நிஷாந்த் குமாா், காவல் நிலையத்தில் புகாரளித்த நபரின் வீட்டில் இருந்து அவரைக் கவனித்து வந்தது தெரியவந்தது. அப்போது, அந்த நபரின் கடன் அட்டை விவரங்களை அறிந்துகொண்ட நிஷாந்த் குமாா், தன்னுடைய நண்பா்களுடன் இணைந்து நகைக் கடைகளில் தங்க நாணயங்களை வாங்கினாா்.

மூவரும் சோ்ந்து 55 கிராம் மதிப்பிலான 5 தங்க நாணயங்களை வாங்கினா். சுமாா் 50 கிராம் எடையுள்ள 4 தங்க நாணயங்கள் அவா்களிடம் இருந்து காவல் துறையினா் கைப்பற்றியுள்ளனா்.

இந்த மோசடியில் அவா்களுடன் தொடா்புடைய பிற நபா்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.