முகப்பு
திருநெல்வேலி

மருத்துவத் துறைக்கு தேர்வானவர்கள் பணிநியமன உத்தரவு கிடைக்காமல் அவதி

சங்கரன்கோவில், ஆக. 11:   தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் சுருக்கெழுத்தர், தட்டச்சர் பணிக்கு தேர்வான 527 பேரில், மருத்துவத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 102 பேர் பணி நியமன உத்தரவு கிடைக்காமல் கவலை அடைந்த

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:08 PM
பகிர்:

சங்கரன்கோவில், ஆக. 11:   தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் சுருக்கெழுத்தர், தட்டச்சர் பணிக்கு தேர்வான 527 பேரில், மருத்துவத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 102 பேர் பணி நியமன உத்தரவு கிடைக்காமல் கவலை அடைந்துள்ளனர்.

  அதேநேரத்தில், இவர்களோடு தேர்வான 425 பேர் வேலைக்குச் சென்று 2 மாத ஊதியமும் பெற்றுவிட்டனர்.

  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் 4-ம் நிலை சுருக்கெழுத்தர், தட்டச்சர் பணிக்கான எழுத்துத் தேர்வு 2008-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி நடைபெற்றது. 527 பணியிடங்களுக்கு சுமார் 60 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

  இதைத் தொடர்ந்து 2008 நவம்பர் 7-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து 19-ம்

தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

  இதனால், தேர்வான 527 பேரும் பணி உத்தரவுக்காகக் காத்திருந்தனர். 6 மாதங்கள் கழித்து கடந்த ஜூன் 2-ம் தேதி துறைவாரியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த துறை மூலம் உத்தரவு கடிதம் வழங்கப்பட்டது.

  வருவாய்த் துறை, ஊராட்சித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, வணிகத் துறை, வனத் துறை, கனிமவளத் துறை, நீதித் துறை, மாநகராட்சி போன்ற பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 425 பேர்களும் பணியில் அமர்ந்து கடந்த 2 மாதங்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

  ஆனால், மருத்துவத் துறை பணிக்குத் தேர்வான சுருக்கெழுத்தர்-தட்டச்சர் 102 பேருக்கு, இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.

  இது தொடர்பாக தேர்வாளர்கள், மருத்துவத் துறை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது,

தமிழ்நாடு தேர்வாணையத்திலிருந்து தேர்வாளர் பட்டியல் வரவில்லை எனத் தெரிவித்தனர்.

  இதையடுத்து, அவர்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தை அணுகி கேட்டபோது, மருத்துவத் துறைக்கு ஏற்கெனவே தேர்வாளர் பட்டியலை அனுப்பிவிட்டதாகத் தெரிவித்தனர்.  இதனால், அரசுப் பணியின் ஒதுக்கீடு பட்டியலில் இடம் பெற்றும், உத்தரவு கடிதம் வராததால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை சென்னை மருத்துவத்துறை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தேர்வாணையத்திலிருந்து

இதுவரை தேர்வாளர் பட்டியல் வரவில்லை. இன்னும் 10 நாள்களில் வந்துவிடுவதாகச் சொல்கிறார்கள் எனத் தெரிவித்தனர்.

  மருத்துவத் துறை உத்தரவுக்கு காத்திருப்போரில் பெரும்பாலோர் பெண்கள் என்பதால், தமிழ்நாடு தேர்வாணையமும், மருத்துவத் துறையும் காட்டும் கண்ணாமூச்சி ஆட்டத்தால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

  அரசு உடனே நடவடிக்கை எடுக்குமா என்பதே தேர்வாளர்களின் கவலை.

முழு கட்டுரையைப் படிக்க →