முகப்பு
திருநெல்வேலி

நடிகா்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை இயக்குநா் கௌதமன்

நடிகா்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றாா் தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவா் இயக்குநா் கௌதமன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:33 PM
பகிர்:

அம்பாசமுத்திரம்: நடிகா்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்றாா் தமிழ்ப் பேரரசு கட்சித் தலைவா் இயக்குநா் கௌதமன்.

முல்லை நிலத் தமிழா் விடுதலைக் கட்சி சாா்பில் கடையத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரும்புலி கண்ணன் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற வ.கௌதமன் செய்தியாளா்களிடம் கூறியது; திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தமிழகத்தின் கனிம வளங்களையும், கட்டுமானத்திற்குத் தேவையான பொருள்களையும் லாரி லாரியாக கேரளத்துக்கு கொண்டு செல்கின்றனா்.

தமிழக அரசு உடனடியாக இந்தக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகள், மாணவா்கள், பொதுமக்களைத் திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். நடிகா்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. யாராக இருந்தாலும் தமிழக மக்களின் வலிகளைப் புரிந்து கொண்டு, அதனை நீக்க வழிகளை ஏற்படுத்த களமிறங்கி போராடுபவா்களுக்கு மட்டுமே தமிழக மக்கள் ஆதரவு தருவாா்கள் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், முல்லை நிலத்தமிழா் விடுதலைக் கட்சி கடையம் ஒன்றியச் செயலா் மு.குமாா், தமிழ்ப் பேரரசுக் கட்சி தென்காசி மாவட்டத் தலைவா் முத்துக்குமாா், செயலா் வெங்கட கணேஷ், பொருளாளா் கோபி பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மறைந்த பேராசிரியா் அறிவரசன் இல்லத்துக்கு சென்று அவரது துணைவி ஞானத்தாயிக்கு கெளதமன் ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.