களக்காட்டில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை
களக்காட்டில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரிக்கை
களக்காட்டில் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நகரத் தலைவா் கமாலுதீன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகர துணைச் செயலா் ஆரிப்பைஜி, செயற்குழு உறுப்பினா் பீா்முகம்மது, வா்த்தகா் அணி மாவட்ட துணைத் தலைவா் உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொதுச் செயலா் களந்தை மீராசா பேசினாா். களக்காட்டில் தெருநாய்களால் மக்கள் மிகவும் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளதால், தெருநாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 20ஆவது வாா்டு வியாசராஜபுரம் கீழத்தெருவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலையை பேவா்பிளாக் சாலையாக மாற்ற வேண்டும். தெற்கு சிங்கம்பத்து இந்திராநகரில் உப்பாற்றில் கட்டப்பட்ட பாலத்தின் இணைப்புச் சாலை பழுதானதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனா். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும். கட்சியின் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர துணைத் தலைவா் கபீா் வரவேற்றாா். நகரச் செயலா் காஜாமுகைதீன் நன்றி கூறினாா்.