இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நிலையிலும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்காக கடந்த நவம்பர் 5-ஆம் தேதி இந்திய - இலங்கை அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தமிழக மீனவர் பிரச்னைகளின் தீர்வுக்கான முதல் படியை உருவாக்கினார்.
அதன் பின்பு, மருத்துவமனைக்குச் சென்று சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார்.
தமிழ் மீனவர்களின் மீது சுஷ்மா ஸ்வராஜ் கொண்டிருக்கும் பாசத்துக்கும், பரிவுக்கும் என்றும் தமிழ்ச் சமுதாயம் நன்றிக்கடன்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பிய உடனே, மீனவர்கள் கோரிக்கையை ஏற்று அவர் எடுத்த நடவடிக்கையால், கைது செய்யப்பட்ட தமிழ் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் பூரண குணமடைந்து தேசப் பணிகளைத் தொடர பிரார்த்திக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.