அகஸ்தீசுவரம் ஒன்றியம், இடலாக்குடியில் உள்ள சார்- பதிவாளர் அலுவலகம் மிகவும் சேதமுற்றுள்ள நிலையில் அதை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகஸ்தீசுவரம் வட்டார மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் யு.தியாகராஜன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்துடன் இணைந்திருந்தபோது மரப்பலகை மற்றும் ஓடுகளால் கட்டப்பட்டது இடலாக்குடி சார்பதிவாளர் அலுவலகம். தற்போது, ஆண்டுகள் பல கடந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு அங்குள்ள ஆவணங்கள், பழைய பத்திரங்களின் நகல்கள் அழிந்த நிலையில் உள்ளன.
இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களின் முக்கியமான ஆவணங்களை பெறமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, மக்கள் நலன்கருதி இந்தக் கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும். 15 நாள்களுக்குள் இதற்கான நடவடிக்கை எடுக்காவிடில், 7 கிராம மக்களைத் திரட்டி இவ்வலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.