குலசேகரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் பேட்டரி திருடியதாக 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
குலசேகரம் பகுதியில் சாலையோரம் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளிலிருந்து பேட்டரிகளை திருடும் நபர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். இந்நிலையில் செருப்பாலூரைச் சேர்ந்த லாசர் என்பவர், காவல்ஸ்தலம் இரட்டைகுளம் பகுதியில் தனது லாரியை அண்மையில் நிறுத்தியிருந்தாராம். அதிலிருந்து 2 பேட்டரிகள் திருட்டுப் போயின.
இதையொட்டி, போலீஸார் நடத்திய விசாரணையில், பொன்மனை குற்றியாணி பகுதியைச் சேர்ந்த விஜிஸ், ரெபின் ஆகியோருக்கு இந்தத் திருட்டில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததாம். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பேட்டரிகளை மீட்டதாகவும், மற்றொரு இளைஞரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.