ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக 3 பேர் கைது
குழித்துறை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
குழித்துறை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
வேர்க்கிளம்பி பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (37). இவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மருத்துவமனைக்கு வந்த மூவர் தங்களது மோட்டார் சைக்கிளை ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன் இடையூறாக நிறுத்தியிருந்தனராம்.
இதைப் பார்த்த கிறிஸ்டோபர், மோட்டார் சைக்கிளை அங்கிருந்து மாற்றி ஓரமாக வைக்கும்படி கூறியுள்ளார். இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிறிஸ்டோபரை மற்ற மூவரும் சேர்ந்து தாக்கினராம். இதில் காயமடைந்த அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதல் குறித்து அறிந்த மார்த்தாண்டம் போலீஸார், அங்கு வந்து தகராறில் ஈடுபட்ட மூவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் கருங்கல் அருகேயுள்ள தெருவுக்கடை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சுஜின் (29), சுபின் (30), கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி பிரபாகரன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸார், மூவரையும் கைது செய்தனர்.