நாய்ப் பண்ணையை அகற்றக் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
ஈசாந்திமங்கலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நாய்ப் பண்ணை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஈசாந்திமங்கலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நாய்ப் பண்ணை வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க நிறுவனர் ஜான்விக்டர்தாஸ் தலைமையில், ஈசாந்திமங்கலம் அண்ணா காலனி பகுதியைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரேவிடம் அளித்த மனு:
தோவாளை வட்டத்துக்குள்பட்ட ஈசாந்திமங்கலம் பகுதியில் அண்ணா காலனி உள்ளது. இங்கு 1996 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட 100 வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் 2 வீடுகளை இடித்து விட்டு நாய்ப் பண்ணை ஒன்றை அமைத்துள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நாய்ப்பண்ணை வைத்துள்ளவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.