நாகர்கோவில் நகர சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம்: மார்க்சிஸ்ட் அறிவிப்பு
நாகர்கோவில் நகரில் உள்ள சாலைகளை சீரமைக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
நாகர்கோவில் நகரில் உள்ள சாலைகளை சீரமைக்காவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இக்கட்சியின் நாகர்கோவில் வட்டாரக் குழுக் கூட்டம், வட்டாரக் குழு உறுப்பினர் ஐடிட் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், நாகர்கோவில் நகரில் ராமன்புதூரிலிருந்து தட்டான்விளை செல்லும் சாலை, டதி பள்ளி சந்திப்பிலிருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் சாலை, பெதஸ்தா சந்திப்பு, அவ்வை சண்முகம் சாலை, பெருமாள் குளம் பகுதி சாலை, கிருஷ்ணன்கோவில் சாலை, டதி அம்மாள் தெரு சாலை போன்ற நகர்பகுதிகளிலுள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன.
இந்த சாலைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். நாகர்கோவிலில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கிடவும், 15 நாள்களுக்கு ஒருமுறை வரும் குடிநீர், தினசரி விநியோகம் செய்ய முக்கடல் அணையை தூர்வாரி கொள்ளளவை பெருக்க நகராட்சி நிர்வாகத்தை கேட்டும்,
புதிதாக போடப்பட்ட சாலைகள் 3 மாதத்திலேயே முழுமையாக பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறி பயனற்றுப் போகிறது. சாலை அமைப்பு ஒப்பந்ததாரர்கள், நகராட்சி அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், நாகர்கோவில் நகர மக்களின் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளுடன் நாகர்கோவில் நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிடுவது, நகர மக்களை திரட்டி, நகராட்சி அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஏ. உசேன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். அந்தோணி, பி. இந்திரா, வட்டாரக் குழு செயலர் மோகன், வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஏ. அஜிஸ், பி. பழனிசாமி, எஸ். ராமசந்திரன், ஏ. கவிதா மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகாண்டனர்.