அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
வெள்ளிச்சந்தை அருகே அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
வெள்ளிச்சந்தை அருகே அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கை, சிறப்பு விருந்தினரான கேரள அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம் மற்றும் கோளரங்கத் தலைவர் அருள்ஜெரால்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியது:
நமது நாட்டில் அனைத்துப் பொருள்களும் இறக்குமதி என்ற அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி குறையும். இந்தியாவில் இருந்து அதிக அளவில் பொருள்கள் ஏற்றுமதி செய்யும் போது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். அது மட்டுமல்லாது நாம் தற்போது தொழில்நுட்பத்தில் அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறோம். இந்தத் தொழில்நுட்பங்களை மாதிரியாக செய்தால் நாடு முன்னேறும். எனவே, நாம் புதிய, புதிய மாதிரிகளை செய்து நமது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றார் அவர்.
கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமையுரையாற்றினார். கல்லூரித் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்திப் பேசினார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை புனித சவேரியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஜெயின் மார்சல், லதா, மார் எப்றேம் பொறியியல் கல்லூரியின் பேராசிரியர் சால்டஸ் டயசன், ஜெயமாதா பொறியியல் கல்லூரி பேராசிரியர் சுப்பிரமணியம், நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகப் பேராசிரியர் சிவபாலன் ஆகியோர் ஐந்து குழுக்களாக பிரிந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்தனர். சிறந்த கட்டுரைகள் பன்னாட்டு நாளேடுகளில் பிரசுரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் அசீஸ்குமார் மற்றும் பேராசிரியர்- பேராசிரியைகள் செய்திருந்தனர்.