தக்கலை அருகே அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இளைஞர் காங்கிரஸார் 47 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அமல்படுத்திய மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, நவம்பர் 8 ஆம் தேதியை கருப்பு தினமாக, எதிர்க்கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, வியாழக்கிழமை (நவ.8), தக்கலையை அடுத்த அழகியமண்டபம் சந்திப்பில் இளைஞர் காங்கிரஸார் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மண்வெட்டி, கலப்பைகள் ஏந்தியும், உடலில் கரிபூசியும், மத்திய அரசுக்கு எதிரான கண்டன வாசகத்தை உடலில் எழுதியவாறும் வேடம் அணிந்து இளைஞர் காங்கிரஸார் பங்கேற்றனர்.
இந்நிலையில், உரிய அனுமதியின்றி பொதுமக்களை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் லாரன்ஸ் உள்பட 47 பேர் மீது தக்கலை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.