மார்த்தாண்டம் அருகே கிணற்றிலிருந்து மூதாட்டி சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
மார்த்தாண்டம் அருகேயுள்ள பாகோடு, வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் பார்கவி (73). இவர் அப்பகுதியில் உள்ள அவரது மகன் வீட்டில் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரை, வியாழக்கிழமை திடீரென காணவில்லையாம்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொது கிணற்றில் மூதாட்டியின் சடலம் கிடப்பதை கண்ட அவரது உறவினர்கள் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலையத்துக்கும், மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப்படை வீரர்கள் வந்து கிணற்றிலிருந்து மூதாட்டியின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.