குமரி மாவட்டத்தில் தொடரும் சம்பவம்: மேலும் 2 கோயில்களில் சிலை, நகைகள் திருட்டு
குமரி மாவட்டத்தில் மேலும் 2 கோயில்களில் சிலைகள் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மேலும் 2 கோயில்களில் சிலைகள் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியைச் சேர்ந்த ஜோதிடர் சந்திரசேகர உண்ணி. இவருக்குச் சொந்தமான குடும்ப கோயிலில் ஒன்றரை அடியில் பித்தளையால் செய்யப்பட்ட தேவி சிலை இருந்தது. பழைமையான இந்தக் கோயிலில், கடந்த 10 நாள்களுக்கு முன்னர்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு அந்தக் கோயிலில் புதிதாக பிரதிஷ்டை செய்த தேவி சிலையையும், அதன் கீழ் புதைக்கப்பட்ட நவரத்தினங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
இதேபோல், கருங்கல் அருகே மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான சங்கரநாராயணர் குளத்து மகாதேவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் இருந்த சிவன் சிலை, வெள்ளிக் கவசம், 4 கிராம் எடையுள்ள 3 தங்கப் பொட்டுகள், 2 பவுன் தங்க ருத்ராட்ச மாலை, உண்டியல் பணம் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த 2 சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரியில் பழைமையான திக்குறிச்சி மகாதேவர் கோயிலிலும் கடந்த வெள்ளிக்கிழமை(ஆக.31) சிலைகள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது . திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் திருடப்பட்ட சிலைகள் ஐம்பொன் சிலைகள் இல்லை என்றும், சிலைகள் மற்றும் நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1.60 லட்சம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் தெரிவித்தார்.