தொகுதி மக்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை: சுரேஷ்ராஜன் எம்எல்ஏ புகார்
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று 3 ஆண்டுகள் முடியும் நிலையிலும் நாகர்கோவில் தொகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று 3 ஆண்டுகள் முடியும் நிலையிலும் நாகர்கோவில் தொகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்றார் நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் என். சுரேஷ்ராஜன்.
இதுகுறித்து, அவர் நாகர்கோவிலில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் பொதுமக்கள் சார்ந்த கோரிக்கைகளை அதிமுக அரசு புறந்தள்ளுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் நிறைவுறும் நிலையிலும், எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியவில்லை.இதையும் மீறி ஒரு சில பணிகளை, அதிகாரிகளிடம் போராடித்தான் பெற வேண்டிய நிலை உள்ளது. நகரில் பல சாலைகள் மிக மோசமாக உள்ளன. இவற்றை உடனே சீரமைக்க வேண்டும். நாகர்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக மாற்ற அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும். குமரி மாவட்டத்தை மக்களின் வசதிக்காக வட்டங்களாக பிரிக்கவேண்டும்.
தண்ணீர் வசதி இருந்தும், நாகர்கோவில் நகரின் 52 வார்டுகளில் 10 தினங்களுக்கு ஒருமுறையே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொரு வார்டிலும் உள்ள ஆழ்குழாய் மோட்டார்களை சீர்செய்து தினமும் குடிநீர் பெற நகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
மேற்கூறிய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 22ஆம் தேதி நாகர்கோவில் வரும் தமிழக முதல்வருக்கு நாகர்கோவில் தொகுதி மக்கள் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
பேட்டியின்போது, நகர திமுக செயலர் வழக்குரைஞர் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக் தாவூது ஆகியோர் உடனிருந்தனர்.