ரீத்தாபுரம் அருகே ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட மனைகளை அளவீடு செய்து தர வலியுறுத்தல்
ரீத்தாபுரம் அருகே பத்தறை காலனியில் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வீட்டுமனையை
ரீத்தாபுரம் அருகே பத்தறை காலனியில் ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வீட்டுமனையை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என மக்கள் குறைதீர்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ரீத்தாபுரம் தே.மு.தி.க. பேரூர் கழகச் செயலர் ரவி, பத்தறை காலனியைச் சேர்ந்த பொதுமக்களுடன் வந்து மனு கொடுத்தார். அதில், குளச்சலை அடுத்துள்ள ரீத்தாபுரம் கிராமத்தில் பத்தறை ஆதி திராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 18 பேருக்கு 2002 ஆம் ஆண்டு கல்குளம் வட்டாட்சியரால் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சான்று வட்டாட்சியர் அலுவலக பதிவேட்டில் உள்ளது.
ஆனால் பட்டா வழங்குவதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. இந்த இடம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. எனவே இந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவர்களிடம் இருந்து வட்டாட்சியரால் வழங்கப்பட்ட வீட்டு மனைகளை மீட்டு தருவதோடு, பட்டாவும் தந்து இடத்தை அளவீடு செய்துதர வேண்டும்.
இதேபோல் கணபதிபுரம் இமயம் இளைஞர் மன்றத்தைச் சேர்த நாகராஜன் என்பவர் தலைமையில் அளித்த புகார் மனுவில், கணபதிபுரம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு வீடுகட்ட பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலானோருக்கு வீடு கட்டும் பணி தொடங்கி முடியும் தருவாயில் உள்ளது. முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மீதம் உள்ள தொகை வழங்கப்படவில்லை. எனவே வீடுகட்டும் திட்டத்தில் முழுமையாக பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் கொடுத்துள்ள மனுவில் குமரி மாவட்டம், வாழையத்துவயலில் உள்ள 109 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. இந்த நிலைத்தை தனியாரிடம் இருந்து மீட்டு எடுத்து வீட்டுமனை இல்லாத தொழிலாளர்களுக்கு 3 சென்ட் வீதம் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.