விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விசாரணையை தமிழக அரசு, சிபிஐ வசம் ஒப்படைத்தால் நல்லது என்றார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விசாரணையை தமிழக அரசு, சிபிஐ வசம் ஒப்படைத்தால் நல்லது என்றார், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.
குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாட்டில் உயர் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சிறந்த 100 பல்கலைக்கழகங்களில், தமிழகத்தைச் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருக்கும். பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்த, கல்வியில் உயர, கல்விக்காக உழைக்கும், சுயநலமற்றவர்களைதான் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும். அதற்கு அரசும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதீப்பீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணையை தமிழக அரசு, சிபிஐயிடம் ஒப்படைத்தால் நல்லது.
வியாபார நோக்கில் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதால்தான் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.
அண்ணா பல்கலைக் கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. தகுதி வாய்ந்த எந்த இந்திய குடிமகனும் துணைவேந்தராக நியமிக்கப்படலாம். நாட்டில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப மாணவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களின் திறமை, தன்னம்பிக்கையை வளர்த்து, அவர்களை தயார் செய்ய வேண்டும். மாணவர்களை மனப்பாடம் செய்ய வைக்கும் டியூஷன் முறையை தமிழகத்தில் ஒழிக்க வேண்டும் என்றார் அவர்.